இந்தியா மற்றும் இந்தோனீசியாவுடன் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கவிருப்பதாக வெளியான அறிவிப்பு, வர்த்தகங்களுக்கும் இங்கு வசிப்பவர்களுக்கும் நற்செய்தியாக அமைந்துள்ளது.
என்றாலும், அதிக பயணச் செலவும் தொடரும் பயணக் கட்டுப்பாடுகளும் பயணங்களை மேற்கொள்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவும் இந்தோனீசியாவும் சிங்கப்பூருக்கு முக்கிய வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளாகும். இங்கு சுற்றுப்பயணத்துறை வளர்ச்சிக்கு அவை பெரும் பங்களிக்கின்றன.
அவ்விரு நாடுகளுடன் நவம்பர் 29ஆம் தேதி முதல், தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் தொடங்குகிறது.
என்றாலும், சிக்கனமாக செலவழிக்கும் பயணிகள் இப்போதைக்குப் பயணம் மேற்கொள்ளத் தயங்கக்கூடும். பயணத்திற்கும் முன்பும் பின்பும் அவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருப்பது மற்றொரு செலவு.
இந்தோனீசியா உடனான பயண ஏற்பாடு, ஒருவழிப் பயணமாக உள்ளது. அதாவது, அங்கிருந்து சிங்கப்பூர் வந்திறங்குவோர் இங்கு தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா செல்வோர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே விமானச் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. என்றாலும், விமானச் சேவையைத் தொடங்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
“கொவிட்-19க்கு முந்தைய பயண சூழலை எட்டுவதற்கு இன்னும் காலமாகும். அதற்கு நாம் இன்னும் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டும். 2023, 2024 வாக்கில்தான் பயணங்கள் வழக்கநிலைக்குத் திரும்பும் என தொழில்துறை நிபுணர்கள் முன்னுரைக்கின்றனர்,” என்கிறார் பொருளியல் வல்லுநர் சோங் செங் வூன்.