கி. ஜனார்த்தனன்
தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் தடத் (விடிஎல்) திட்டத்தை இந்தியாவுக்கும் சிங்கப்பூர் நீட்டித்திருப்பதைச் சிறிய, நடுத்தர வர்த்தகர்கள், சுற்றுப்பயணிகள், வெளிநாட்டு ஊழியர்கள் முதல் குடும்பத்தினர்வரை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இம்மாதம் 29ஆம் தேதி முதல் இந்தியா, இந்தோனீசியா நாடுகளுடனான விடிஎல் திட்டத்தைச் சிங்கப்பூர் தொடங்குகிறது.
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 99 நாடுகளிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பயணிகளை வரவேற்பதற்காக இந்தியாவும் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் முரசிடம் பேசிய வர்த்தகத் தலைவர்கள், சிங்கப்பூர்-இந்தியா எல்லைத் திறப்பு பொருளியல் மேம்பாட்டுக்குப் பெரிதும் கைகொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். சிங்கப்பூரின் வர்த்தகங்களைப் பெரிதும் பாதித்துள்ள ஊழியர் பற்றாக்குறை பிரச்சினை தீரும் நேரம் நெருங்கிவிட்டதாக சிங்கப்பூர் இந்திய வர்த்தக சம்மேளனத் தலைவர் டாக்டர் டி சந்துரு தெரிவித்தார்.
"இந்திய சுற்றுப்பயணிகள் வருகையால் இங்குள்ள வர்த்தகங்கள், குறிப்பாக லிட்டில் இந்தியா வர்த்தகங்களின் வியாபாரம் மேம்படும்," என்று அவர் கூறினார்.
பயணங்களுக்கான
முன்பதிவுகளில் அதிகரிப்பு
திட்டம் குறித்து திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் இந்தியச் சுற்றுப்பயணங்களுக்கான முன்பதிவுகளில் 30% அதிகரிப்பு இருந்ததாக பயண முகவர் ராஜ்குமார் கூறினார்.
விடுமுறைக் காலத்தில் விடிஎல் திட்டம் துவங்கப்படுவது மிகவும் வசதியாக இருப்பதாக அவர் கூறினார்.
பயணங்களுக்கான முன்பதிவு தமக்கு ஒரே நாளில் 70% அதிகரித்ததாகக் குறிப்பிட்ட மற்றொரு பயண முகவர் சரவணன், அடுத்த சில நாட்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்திய விமானப் பயணங்களின் ஏற்பாடு பற்றித் தெரிவிக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
'சரக்குகளின் இறக்குமதி
செலவு குறையக்கூடும்'
'தி சென்னை டிரேடிங்' மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் டி மூர்த்தி, "சரக்கு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொருட்களை இங்கு இறக்குமதி செய்யும் செலவு குறையும்," என்றார். காய்கறிகளின் விலை, கிலோ இரண்டு வெள்ளிக்கு மேல் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் மருந்தகப் பொருட்களில் கணிசமான அளவு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சிங்கப்பூர் உற்பத்தியாளர் சங்கத்தின் உயிர் அறிவியல் பிரிவுத் தலைவர் மோகன் குமார் தெரிவித்தார்.
"சிங்கப்பூரின் மருந்தக வர்த்தகப் பிரிவினர் அடிக்கடி இந்தியா செல்வதால் இத்திட்டம் சிறந்தது. எனினும், பெங்களூருடனான பயணத்தடத் திட்டம் மேலும் வசதியாக இருக்கும். பெங்களூர் இந்தியாவின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்று என்றார் அவர்.
குடும்பத்தினரைச் சந்திக்க
முடியும் என்ற மகிழ்ச்சி
சிங்கப்பூரில் பணிபுரியும், வசிக்கும் இந்திய நாட்டவர்களுக்கும் இந்தியாவில் உறவினர்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் இருநாடுகளும் எல்லைகளைத் திறந்திருப்பதில் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
"சிங்கப்பூருக்கும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களுக்கும் இடையே மேலும் அதிகமான விடிஎல் திட்டங்களை ஏற்படுத்தித் தந்தால் நம் ஊழியர்கள் சிங்கப்பூரிலிருந்து நேரடி விமானப் பயணம் மூலம் அந்தந்தப் பகுதிகளை அடைந்துவிடலாம். தொற்று அபாயத்தைக் குறைத்துக்கொள்ளலாம்," என்றார் 'பில்டிங் புரொடக்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன் மெட்டீரியல்ஸ் இன்டஸ்ட்ரி குரூப்' நிர்வாக இயக்குநர் திரு பெஞ்சமின் லிம்.
இந்தியாவுடனான விடிஎல் திட்டம் குறித்துக் கேள்விப்பட்டதும் தாம் மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டார் கட்டுமான ஊழியர் ஜெயசீலன். தம்முடைய குடும்பத்தினரைக் காண இந்தியா செல்லும் எண்ணம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையே பயணங்கள் அதிகரிப்பது பொருளியலுக்கு நல்லது என்றாலும் கிருமித்தொற்று எண்ணிக்கை இதனால் வெகுவாக உயரக்கூடாது என்று இல்லத்தரசி திருவாட்டி அகிலா, 40, கூறினார்.
இம்மாதம் 12ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வெளியிடும் தடுப்பூசிச் சான்றிதழ்களை இந்தியா அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.