சிங்கப்பூரில் புதிதாக 2,069 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் 2,021 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் ஐவருக்கும் தொற்று உறுதியானது.
சுகாதார அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 16) இரவு இதனைத் தெரிவித்தது.
வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 0.88ஆகக் குறைந்தது. திங்கட்கிழமை அது 0.94ஆக இருந்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 241,341ஆக உள்ளது.
இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 67 முதல் 95 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 612ஆக உள்ளது.