ஆஸ்திரேலியாவின் 2வது ஆகப்பெரிய நகரமான மெல்பர்னில் பழைய உற்சாகம் திரும்பியுள்ளது. எஞ்சியிருந்த ஒரு சில கொவிட்-19 கட்டுப்பாடுகளும் நேற்று தளர்த்தப் பட்டதால் அங்கு இயல்வு வாழ்க்கை களைகட்டத் தொடங்கியுள்ளது.
மதுபானக் கூடங்கள், காப்பிக் கடைகள் முழு அளவில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விக்டோரிய மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ருஸ், "உங்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதுநாள் வரை ஏங்கிய, தவறவிட்ட அனைத்தையும் நீங்கள் அனுபவிக்க முடியும்," என்றார்.
கிருமியோடு வாழும் உத்திக்கு மாறியுள்ள விக்டோரியா அரசு, கடைசியாக நேற்று தளர்வுகளை அறிவித்து உள்ளது.
இதன்கீழ் மக்கள் ஒன்று கூடு வதற்கு வரம்பு கிடையாது.
ஆடலாம், பாடலாம், வீட்டில் வரம்பின்றி கூடி அளவளாவலாம்.
ஆனால் சுகாதார நிலையங்கள், பொதுப் போக்குவரத்து, சில்லறைக் கடைகளில் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும்.
மெல்பர்னில் இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவார இறுதியில் 90 விழுக்காட்டை எட்டவிருக்கிறது. இவ்வாண்டின் பெரும்பாலான சமயங்களில் கிருமிப் பரவலை ஆஸ்திரேலியா கட்டுக்குள் வைத்திருந்தது.
ஆனால் கேன்பரா உட்பட சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் உருமாறிய 'டெல்டா' கிருமி எதிர் பாராதவிதமாக பரவியதால் ஒரு மாதத்துக்கு மேல் முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தடுப்பூசி ஒன்றே மக்களை பாதுகாக்கும் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்த ஆஸ்திேரலியா தடுப்பூசி போடுவதை தீவிரமாக்கியது.
'டெல்டா' அலை பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் குறைவான தொற்றுச் சம்பவங்களே பதிவாகியுள்ளன. மொத்தம் 194,000 பேர் டெல்டா கிருமியால் பாதிக்கப்பட்டனர். 1,922 பேர் கிருமிக்குப் பலியாகினர். இந்நிலையில் சிட்னியை உள்ளடக்கிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 262 பேரும் விக்டோரியா மாநிலத்தில் 1,007 பேரும் பாதிக்கப்பட்டனர்.