சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தரைவழி எல்லைகள் விரைவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
"தடுப்பூசி போட்டவர்களுக்கான இரு நாடுகளுக்கு இடையிலான 'விடிஎல்' பயணம் இறுதி வடிவம் பெற்று வருகிறது. இரு நாடுகளில் உள்ள பல ஊழியர்கள் பல மாதங்களாக குடும்பத்தைப் பிரிந்து உள்ளனர். குடும்பத்துடன் அவர்கள் ஒன்றுசேர முன்னுரிமை வழங்கப்படும்," என்று அமைச்சு கூறியது.
ஆனால் சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் திறக்கப்படும் தேதியை அது தெரிவிக்கவில்லை.
இம்மாதம் 29ஆம் தேதி சிங்கப்பூர்-மலேசிய தரைவழி எல்லைகள் திறக்கப்படும் என்று மலேசிய ஊடகங்களில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து அமைச்சின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே ஏர்ஏஷியா, ஜெட்ஸ்டார் ஏஷியா, மலேசிய ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர், ஸ்கூட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய ஆறு விமான நிறுவனங்கள் சிங்கப்பூர்-மலேசியா விமானச் சேவையை வழங்கவிருக்கின்றன.
இதனை தெரிவித்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டோருக்கான தடத்தின் கீழ் பயணிகள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியது.
இந்நிலையில் ஜோகூர் பாலம் அல்லது துவாஸ் 2வது பாலம் வழியாக சிங்கப்பூர்-மலேசிய தரை வழிப் பயணமும் விரைவில் அனு மதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.