தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், வரும் ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து கூடுதல் நகரங்களுக்கு விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் வழங்கவிருக்கிறது.
ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, கோப்பன்ஹேகன், ஃபிராங்ஃபர்ட், லண்டன், மிலான், மியூனிக், நியூயார்க், பாரிஸ், ரோம், சியேட்டல், வேன்கூவர் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்களை தான் இயக்கவிருப்பதாக எஸ்ஐஏ வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) தெரிவித்தது.
ஜனவரி 19ஆம் தேதி முதல், ஹியூஸ்டன், மான்செஸ்டர் ஆகிய நகரங்களில் இருந்தும் விமானங்களை எஸ்ஐஏ இயக்கும்.
தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், இந்த மாதம் 29ஆம் தேதி முதல், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விமானங்கள் இயக்கப்படும் என்று எஸ்ஐஏ முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த மாதம் 29ஆம் தேதி முதல், தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் இந்தோனீசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் வரலாம் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த திங்கட்கிழமை அறிவித்து இருந்தார்.