புதிதாக உருவெடுத்திருக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று அலையை எதிர்கொள்ள, முழு முடக்கநிலையை மீண்டும் அறிவிக்கவிருக்கிறது ஆஸ்திரியா. மேற்கு ஐரோப்பாவிலேயே இதனை மீண்டும் செய்யும் முதல் நாடாக விளங்குகிறது ஆஸ்திரியா. அதேவேளையில், தடுப்பூசியை அந்நாடு கட்டாயமாக்க இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் முடக்கநிலை பொருந்தும். அது 10 முதல் 20 நாள்கள் வரை நீடிக்கும் என்று ஆஸ்திரிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) தெரிவித்தது.
"போதுமானோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைப்பதில் நாங்கள் வெற்றியடையவில்லை," என்று ஆஸ்திரியப் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முடக்கநிலை நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடங்கும் என்றும் தடுப்பூசி போட்டிருப்பது அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரிய மக்கள்தொகையில் 66 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேற்கு ஐரோப்பாவிலேயே இது ஆகக் குறைவான விகிதம்.

