சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைத் திறப்பு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், பழையபடி ஜோகூருக்குச் சென்றுவரலாம் என சிங்கப்பூரர்கள் இப்போதைக்கு எதிர்பார்க்கக்கூடாது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தொடக்க கட்டமாக, நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போருக்கே எல்லை திறக்கப்படலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். சோதனைச் சாவடிகளில் செயல்பாட்டு விவகாரங்களைச் சரிசெய்ய நேரம் தேவைப்படும்.
கொவிட்-19க்கு முந்தைய சூழலில், உட்லண்ட்ஸ் கடற்பாலம் மற்றும் துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாக நாள்தோறும் ஏறத்தாழ 415,000 பேர் எல்லையைக் கடந்தனர். ஆனால், சிங்கப்பூர்-மலேசியா நில எல்லை மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை சிறிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைகள் இந்த மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 18) தெரிவித்து இருந்தார்.
தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் தொடக்க கட்டமாக, சிங்கப்பூர் அல்லது ஜோகூர் பாருவில் வேலை செய்யும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அவர் இதனைக் கூறியதையடுத்து பேசிய சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு, தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் குறித்த மேல்விரங்கள் விரைவில் இறுதிப்படுத்தப்படும் என தான் நம்புவதாகக் கூறியது.