வாழ்க்கையோடு விளையாடாதீர்கள், கொவிட-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள் என்று தடுப்பூசியைத் தவிர்க்கும் மக்களை சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் மென்னத் மாக் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், வயது எப்படி இருந்தாலும் ஒவ்வொருவரும் தடுப்பூசியை, பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படும் வயது குறைந்தவர்கள், குறிப்பாக 20 முதல் 30 வரை வயதுள்ளவர்கள் விகிதாச்சாரம் அதிகரிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொற்று ஏற்படக்கூடிய குறைந்த வயது மக்கள் எல்லாருமே அதில் இருந்து குணமடைந்துவிடலாம் என்ற எண்ணம் கூடாது என்று குறிப்பிட்ட அவர் சிங்கப்பூர் இதில் மெத்தனத்துடன் இருந்துவிடலாகாது என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 15.6 விழுக்காட்டினருக்கு வயது 20 முதல் 30 வரை. இந்த விகிதாச்சாரம் ஒரு வாரம் முன்னதாக 14.2%.
வெளியே சென்றுவர வேண்டிய தேவை இளம் வயதினருக்கு அதிகமாக இருக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் அவர்களில் அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை வரலாம் என்றார் அவர்.