சிங்கப்பூர்-மலேசியா நில எல்லை இம்மாத இறுதிக்குள் திறக்கப்படலாம்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று சனிக்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைத் தொடங்க சிங்கப்பூரும் மலேசியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அது கூறியது.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் பிரிந்து வாழும் குடும்பங்கள் பயணம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
“பல அமைப்புகளுடன் சேர்ந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மாத இறுதிவாக்கில் நிலவழி பயணங்களை மேற்கொள்வதற்கான தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைத் தொடங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
நில எல்லைகள் இம்மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என்று மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்தத் தகவலை திரு கான் உறுதிப்படுத்தவில்லை.
இதுகுறித்த மேல்விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
நிலவழி எல்லை திறக்கப்பட்டவுடன், தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்வர் என்று திரு கான் கூறினார். அந்த எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்படும் என்றார் அவர்.