தனிச்சிறப்புமிக்க வெளிநாட்டு இல்லப் பணிப்பெண், முதலாளி விருது போட்டியில் குமாரி மாயாசரி என்ற பணிப்பெண்ணும் அவருடைய முதலாளியான திருவாட்டி விவியன் சின்னும் முதலிடத்தைப் பெற்று இருக்கிறார்கள்.
குமாரி மாயாசரி ஆறாண்டு காலமாக தன் முதலாளிக்கு அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றி வருகிறார்.
அதை அங்கீகரித்த திருவாட்டி விவியன் சின் குடும்பத்தினர் அந்தப் பணிப்பெண்ணுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினர்.
குமாரி மாயாசரி, தனது சொந்த ஊரான இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள செமராங்கில் ஓர் இடத்தை வாங்கி அதில் ஈரறை வீடு ஒன்றைக் கட்ட திருவாட்டி சின்னின் தாயார் $18,000 கடன் கொடுத்து உதவினார்.
இது பற்றி கருத்து கூறிய அந்தப் பணிப்பெண், “என் முதலாளிகள் மிகவும் அன்பானவர்கள். குடும்ப உறுப்பினர் போலவே என்னை நடத்துவர்.எப்போதுமே என்னுடன் சேர்ந்துதான் அவர்கள் உணவு உண்பார்கள்.
“நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன்தான் நடந்துகொள்வோம்,” என்று தெரிவித்தார்.
முதலாளியும் பணிப்பெண்ணும் இப்படி ஒருவர் மீது ஒருவர் அக்கறையோடு, மரியாதையோடு செயல்படுவது அவர்களுக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்தது.
சமூக ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு பணிப்பெண் ஊழியர் சங்கம் இந்த விருதுக்கு ஏற்பாடு செய்தது.
விருதைப் பெறுவதற்கு 200க்கும் அதிக விண்ணப்பங்கள் வந்தன. இறுதிப்போட்டிக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், சிங்கப்பூரில் பணிப்பெண்கள் புதிய ஏற்பாடுகளுடன் குடும்பங்களுக்கு உதவ முன்வந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதேபோல, முதலாளிகளும் பணிப்பெண்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு நடந்துகொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சங்கத்தின் வீட்டு வேலை பணிப்பெண்-முதலாளி பாராட்டு தினம் நேற்று நடந்தது. அதில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.