சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கு அன்றாடம் ஆறு விமான சேவைகளுடன் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தடுப்பூசி பயணத்தடத் திட்டம் (விடிஎல்) இம்மாதம் 29ஆம் தேதி தொடங்குகிறது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான இந்தப்பயணத் திட்டத்தின் கீழ் பயணம் செய்வதற்கான பயண அட்டைக்கு, குறுகியகால வருகையாளர்களும் நீண்டகால வருகையாளர்களும் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை ஆறு மணி முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
இந்த விவரங்களை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்துஆணையம் நேற்று வெளியிட்டது.
இரு நாடுகளுக்குமிடையே திட்டமிட்ட பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது பற்றி இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுடன் உடன் பாடு காணப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
விடிஎல் சாராத விமான சேவை களையும் விமான நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு வழங்கலாம்.
எனினும், இத்தகைய விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் தற்போதுள்ள பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
"விடிஎல் பயண சேவைகள் மற்றும் விடிஎல் சாராத பயண சேவைகளின் விவரங்கள் தயாரானதும் விமான சேவை நிறுவனங்கள் அவற்றை வெளியிடும்," என்றும் ஆணையம் கூறியது.
பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அவசரம் தேவையில்லை. வரும் 29ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 21 வரை அல்லது ஏழு முதல் 60 நாள்களுக்கான பயண அட்டைகள் வழங்கப்படும் என்றும், டிசம்பர் முதல் தேதிக்குப் பிறகு சிங்கப்பூர் வர விரும்புவோர், நவம்பர் 24ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிக்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந் தரவாசிகள், 12 வயதும் அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் ஆகியோர் விடிஎல் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய விடிஎல் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
விடிஎல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து குறுகியகால வருகையாளர்களும் நீண்டகால பாஸ் வைத்திருப்பவர்களும் தடுப்பூசி போட்டோருக்கான பயண அட்டையைப் பெறுவார்கள்.
விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க, விடிஎல் பயண அட்டைக்கு விண்ணப்பிப்போர், கடவுச்சீட்டு, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான மின்னிலக்க ஆதாரம், சிங்கப்பூரில் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளும் முகவரி ஆகியவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
மலேசியா, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வரும் குறுகிய கால வருகையாளர்களும் நீண்ட கால வருகையாளர்களும் விடிஎல் பயண அட்டைக்கு இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா, ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளிலிருந்து பயணம் செய்ய விடிஎல் பயண அட்டைக் கான விண்ணப்பங்கள் மாலை 6 மணிக்கே திறக்கப்படும்.
'விடிஎல்'-இன் கீழ், முழுமை யாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் விடிஎல் நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தல் தேவையின்றி சிங்கப்பூருக்கு வரலாம்.
ஆனால் புறப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பும் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் பிசிஆர் கொவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும்.
குடும்பங்களைப் பிரிந்து தவிப்பவர்களுக்கும் விடுமுறைக்காக ஏங்குபவர்களுக்கும் மிகவும் நல்ல செய்தி என்றார் குடாச்சாரி மளிகைக் கடையின் உரிமையாளர் சீதாதேவி, 40. வர்த்தகம் பெருகும் என்று அவரைப்போல் பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.