சிங்கப்பூரில் நேற்று 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,670 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் பதிவான ஆகக் குறைவான பாதிப்பு இது. செப்டம்பர் 27 அன்று 1,647 பேர்க்கு கொரோனா பாதிப்பு பதிவானது.
வாராந்திர கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் நேற்று முன்தினம் சனிக்கிழமை 0.78ஆக இருந்த நிலையில், நேற்று அது 0.81 எனச் சற்றே கூடியது.
தொடர்ந்து ஒன்பது நாள்களாக இவ்விகிதம் ஒன்றுக்குக் கீழ் இருந்து வருகிறது.
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைப் பயன்பாட்டு விகிதம் கடந்த இரு வாரங்களாகக் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 56.8 விழுக்காடாக இருந்த இவ்விகிதம், நேற்று 52.9% என மேலும் குறைந்தது.
இதனிடையே, கொவிட்-19 தொற்றால் உடல்நிலை மோசமாகி, 63 முதல் 95 வயதிற்குட்பட்ட மேலும் எட்டுப் பேர் இறந்துவிட்டனர். இதனையடுத்து, கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை 662ஆக உயர்ந்தது.
சிங்கப்பூரில் இதுவரை 252,188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.