சிங்கப்பூரில் ஏறத்தாழ இரண்டு மாத காலம் நீடித்த கட்டுப்பாட்டு காலகட்டத்தின்போது ஏற்பட்ட வாடகைக் செலவைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவும் ஒரு முயற்சியாக, வரும் வெள்ளிக்கிழமைமுதல் $470 மில்லியனுக்கும் அதிக தொகையை 40,000க்கும் மேற்பட்ட வாடகைதாரர்களும் சொந்த கட்டடத்தில் தொழில் நடத்துவோரும் பெறுவார்கள்.
வாடகை ஆதரவுத் திட்டத்தின்கீழ், இத்துடன் மூன்றாவது முறையாக பண உதவி கொடுக்கப்படுகிறது.
செப்டம்பர் 27 முதல் நவம்பர் 21 வரைப்பட்ட காலத்திற்கான ஒரு மாத வாடகைக்குச் சமமான தொகையை அவர்கள் பெறுவார்கள் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஏற்கெனவே அக்டோபர் 20ஆம் தேதி அறிவித்து இருந்தார்.
இந்த வாடகை நிவாரண உதவி சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் லாபநோக்க மற்ற அமைப்புகளுக்கும் கிடைக்கும். அவற்றின் ஆண்டு வருவாய் $100 மில்லியனுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
வர்த்தகக் கட்டடங்களில் வாடகைக்குத் தொழில் நடத்துவோரும் சொந்த கட்டடங்களில் தொழில் நடத்துவோரும் இதற்குத் தகுதி பெறுவார்கள்.
கட்டட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இந்தத் தொகை வாடகைதாரர்களுக்கு நேரடியாகக் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நேற்று கூட்டறிக்கையில் தெரிவித்தன.
கடந்த ஆகஸ்ட் மாதமும் செப்டம்பர் மாதமும் இதைப்போலவே வாடகை உதவித்தொகை கொடுக்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டின் மூலம் அரசாங்கத்திடம் இருந்து வாடகைதாரர்களுக்கு குறித்த காலத்தில் உரிய முறையில் வாடகை உதவித்தொகை கிடைக்கும் என்று அறிக்கை தெரிவித்தது.
மூன்று தவணைகளையும் சேர்த்து நேரடியாக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வாடகைச் செலவு நிவாரண ஆதரவு மொத்தம் $900 மில்லியனுக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை உதவித்தொகையைப் பெற தகுதி உள்ளவர்கள், 'பேநவ்' செயலி அல்லது 'ஜைரோ' ஏற்பாட்டைக் கொண்டிருந்தால் வெள்ளிக்கிழமை முதல் அவர்களுக்குப் பணம் கிடைக்கும்.
இந்த வசதி இல்லாதவர்கள் டிசம்பர் 10ஆம் தேதி வாக்கில் காசோலையைப் பெறுவார்கள். இரண்டாவது தவணையாக உதவித்தொகையைப் பெற்றுள்ள வாடகைதாரர்களும் சொந்தக் கட்டடத்தில் தொழில் நடத்துவோரும் தொடர்ந்து மூன்றாவது தவணை உதவியையும் பெறுவார்கள் என்று இந்த இரண்டு அமைப்புகளும் தெரிவித்தன.
இரண்டாவது தவணை பண உதவிக்குத் தகுதிபெறாமல் மூன்றாவது தவணை பண உதவிக்குத் தகுதிபெறுவோர் இந்த ஆணையத்திடம் டிசம்பர் 10 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 21 வரை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யவேண்டும்.
வாடகை ஆதரவு திட்டத்தின் இரண்டாவது தவணையின்கீழ் செப்டம்பர் 22 முதல் 35,800க்கும் மேற்பட்ட வாடகைதாரர்களுக்கும் சொந்தக் கட்டடத்தில் தொழில் நடத்துவோருக்கும் உதவி கிடைத்தது.
இது ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18 வரைப்பட்ட காலகட்டத்திற்கான மாத வாடகையில் பாதி அளவுக்கு இருந்தது.
அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே $200 மில்லியனுக்கும் அதிக தொகையைப் பெற்றனர்.
கூடியவிரைவில் ரொக்க நிவாரணம் அவர்களுக்குக் கிடைப்பதற்காக முன்னதாகவே அந்த உதவியை அரசாங்கம் அளித்தது. இந்தத் திட்டத்தின்கீழ் முதல் தவணை உதவி ஆகஸ்ட் 6 முதல் கொடுக்கப்பட்டது.
சொந்த இடத்தில் தொழில் நடத்துவோர், வாடகைதாரர்களுக்கு 3வது முறையாகக் கொடுக்கப்படுகிறது

