சிங்கப்பூர்-மலேசியா நில எல்லை திறக்கப்படுவதற்கு முன்பு, தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்துக்கான சோதனையோட்டம் இன்று (நவம்பர் 23) நடத்தப்பட்டது.
சிங்கப்பூர்-மலேசியா நில எல்லை, மாத இறுதியில் திறக்கப்படலாம் என்று சிங்கப்பூர் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தமது டுவிட்டர் பக்கதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜோகூர் கடற்பாலத்தில் தொடங்கப்படவிருக்கும் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்துக்கான சோதனையோட்டத்தை இரு நாட்டு அதிகாரிகளும் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
“நில எல்லை திறக்கப்படுவதை இரு நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அது நல்லபடியாக நடந்தேறட்டும்,” என்று அமைச்சர் கைரி பதிவிட்டுள்ளார்.
அதிகாரிகள் சோதனையோட்டம் நடத்துவதைக் காட்டும் சில புகைப்படங்களையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைகள் திறக்கப்பட்ட முதல் வாரத்தில், ஏறத்தாழ 1,440 பேர் சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே பயணம் மேற்கொள்வர் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்திருந்தார்.
இரண்டாவது வாரம் இந்த எண்ணிக்கை 2,500ஆகவும் அதற்கு அடுத்த வாரம் இது 5,000ஆகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.