மவுண்ட் பிளசண்ட் வட்டாரத்தில் சுமார் 5,000 வீடுகளுடன் புதிய பொது வீடமைப்புப் பேட்டை உருவாக்கப்பட உள்ளது. அந்த வட்டாரத்தில் பழைய காவல்துறை கல்விக்கழகம் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கட்டும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட இருக்கும் முதல் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) திட்டமாக அது அமையும். பொது வீடமைப்புப் பேட்டை என்பது இன்னும் யோசனை வடிவில் இருந்தபோதிலும் மவுண்ட் பிளசண்ட் வட்டாரத்தின் இயற்கை வளத்தையும் மரபுடைமையையும் அடிப்படையாகக் கொண்டு அதன் வடிவமைப்பு உருவாக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
இந்தப் புதிய பேட்டை 33 ஹெக்டர் பரப்பளவில், அதாவது பிடாடரி தளத்தின் மூன்றில் ஒரு பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படும். தாம்சன் ரோடு, தீவு விரைவுச்சாலை போன்றவை அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும்.
மேலும் முதிர்ச்சியடைந்த தோ பாயோ நகருக்கு அருகில் இது அமையும். பழைய காவல்துறை கல்விக்கழகத்தின் பகுதியாக அமைந்துள்ள நான்கு கட்டடங்களும் அணிவகுப்பு சதுக்கமும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதோடு வருங்காலக் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றக்கூடிய சமூகக் கூடங்களாக அவை பயன்படுத்தப்படும்.
சில்லறைக் கடைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய அக்கப்பக்க மையம் ஒன்றும் புதிய பேட்டையின் அருகில் அமையும்.
திறந்தவெளி, பசுமைப் பகுதியுடன் சமூக வெளி வசதி
களுடன் கூடியதாகவும் புதிய வட்டாரம் வடிவமைக்கப்படும் என்று வீவக, நகர மறுசீரமைப்பு ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம் ஆகியன நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயன்றவரை அந்த வட்டாரத்தின் இயற்கை வளத்தையும் மரபுடைமை அம்சங்களையும் பழைய கட்டடங்களையும் காப்பது தொடர்பாக சில குழுக்களுடனும் காவல்துறை சமூகத்துடனும் அதிகாரிகள் கலந்து பேசி உள்ளனர்.
இதற்கிடையே, இந்த வட்டாரத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ள சாலைக் கட்டமைப்பு சரிசெய்யப்பட்டு வருவதாக நகர மறுசீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் நில ஆணையமும் கூறியுள்ளன.
சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக 2019 முதல் ஈராண்டுகளாக வீவக நடத்திய ஆய்வின் முடிவைத் தொடர்ந்து சாலைக் கட்டமைப்பு சரி செய்யப்படுகிறது. வீடுகள் அமைய உள்ள பகுதி களை உள்ளடக்கிய 71.6 ஹெக்டரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவை தெரிவித்தன.

