தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தட (விடிஎல்) திட்டத்தின்கீழ், சென்னை, புதுடெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கான விமானச் சேவை முன்பதிவுகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இணையப் பக்கத்தில் தொடங்கியுள்ளன.
அவை ‘விடிஎல்’ விமானச் சேவைகள் என தனது இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக எஸ்ஐஏ இன்று புதன்கிழமை (நவம்பர் 24) தெரிவித்தது.
இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கோல்கத்தா ஆகிய நகரங்களுக்கு இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து ‘விடிஎல்’ அல்லாத விமானங்களையும் தான் படிப்படியாக இயக்கவிருப்பதாக எஸ்ஐஏ அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூருக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து வாரத்துக்கு நான்கு முறை ‘விடிஎல்’ அல்லாத விமானங்களை தான் இயக்கவிருப்பதாக எஸ்ஐஏவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் திருச்சிக்கும் இடையே டிசம்பர் 2ஆம் தேதியிலிருந்து வாரத்துக்கு மூன்று முறை விமானங்கள் இயக்கப்படும் என்றும் அது தெரிவித்தது. இந்த விமானச் சேவைகளுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.
‘விடிஎல்’ ஏற்பாட்டின்கீழ் பயணம் மேற்கொள்ள தங்களுக்குத் தகுதி இருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று எஸ்ஐஏ கூறியது.
சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதோர் ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் பயணம் செய்ய விரும்பினால், விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு தடுப்பூசிப் பயண அனுமதியைப் பெற அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளும் 12 வயதுக்கும் அதற்குக் கீழ் உள்ள சிறுவர்களும், ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.