கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) வரும் 29ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி நகரங்களுக்கு விமானங்களை இயக்க இருக்கிறது. விமானச் சேவைகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், பயணச்சீட்டு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
'விடிஎல்' திட்டத்தின்கீழ் பயணம் செய்ய தங்களுக்குத் தகுதி இருக்கிறதா என்பதைப் பயணிகள் உறுதிசெய்துகொள்ளுமாறு எஸ்ஐஏ அறிவுறுத்தி இருக்கிறது.
சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதோர் 'விடிஎல்' திட்டத்தின்கீழ் பயணம் செய்ய விரும்பினால், விசாவுக்கு விண்ணப்பிக்குமுன் தடுப்பூசிப் பயண அனுமதியைப் பெற அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளும், 12 மற்றும் அதற்கும்கீழ் வயதுடைய சிறார்களும் 'விடிஎல்' திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வர பயண அனுமதி கோரி விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.
இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கோல்கத்தா ஆகிய நகரங்களுக்கு இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து 'விடிஎல்' அல்லாத விமானங்களையும் படிப்படியாக இயக்கவிருப்பதாக எஸ்ஐஏ அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் - ஹைதராபாத் இடையே வாரம் நான்கு முறையும் டிசம்பர் 2ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூர் - திருச்சி இடையே வாரம் மூன்று முறையும் 'விடிஎல்' அல்லாத விமானங்களை இயக்கவிருப்பதாக எஸ்ஐஏவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் அறிவித்திருக்கிறது.