தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) இம்மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானச் சேவையை தொடங்கவிருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சென்னை-சிங்கப்பூர் வழித்தடத்தில் இண்டிகோ நாள்தோறும் ‘விடிஎல்’ விமானச் சேவையை வழங்கும்.
“இந்தியா-சிங்கப்பூர் இடையிலான கொரோனா பாதுகாப்பு வளைய (air bubble) உடன்பாட்டின்படி, வாரத்திற்கு 3,618 பயண இருக்கைகள் இண்டிகோ நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 1,624 இருக்கைகள், சென்னை-சிங்கப்பூர் ‘விடிஎல்’ விமானச் சேவைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன,” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய இருக்கைகள் சென்னை-சிங்கப்பூர் இடையே ‘விடிஎல்’ அல்லாத விமானச் சேவையின்கீழ் வரும்.
இம்மாதம் 29ஆம் தேதியில் இருந்து, ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் சிங்கப்பூர்-சென்னை இடையே விமானச் சேவையை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.