அரசாங்க ஊழியர்கள் அனைவர்க்கும் ஆண்டிறுதி போனசாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.
இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறை மட்டும் $500 வழங்கப்படும். MX15 மற்றும் MX16 தரநிலைகளுக்கு நிகரான பதவிகளில் இருப்போர்க்கும் ஓஎஸ்எஸ் தரநிலை III, IV ஊழியர்களுக்கும் இந்தக் கூடுதல் தொகை கிடைக்கும்.
“கடந்த ஓராண்டாக, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தேசிய அளவிலான போரில் அரசாங்க ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்து வந்துள்ளனர். சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் களைப்பறியாது பணியாற்றி வருகின்றனர்,” என்று பொதுச் சேவைப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களது நீடித்த கடின உழைப்பையும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பலதரப்பட்ட பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் போனஸ் வழங்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
இதனுடன், வழக்கம்போல் அரசாங்க ஊழியர்கள் அனைவர்க்கும் 13வது மாத போனஸ் எனக் குறிப்பிடப்படும் வருடாந்திர சம்பள நிரப்புத்தொகையும் (AWS) வழங்கப்படும்.