சிங்கப்பூர்-மலேசியா தரைவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் (விடிஎல்) வழி ஜோகூர் பாருக்குச் செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே விற்றுத் தீர்ந்தன.
பயணச்சீட்டு வாங்க நேற்று நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் அல்லாடியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
நேற்றுக் காலை 8 மணிக்கு விற்பனை தொடங்கியதுமே பயணச்சீட்டுகளை வாங்க ஆயிரக்கணக்கானோர் அலைமோதியதாக பேருந்து சேவை நிறுவனங்கள் கூறின.
விற்பனைக்கு விடப்பட்ட 20 நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்தாக நிறுவனங்கள் தெரிவித்தன. எனினும் பின்னர் பயணச்சீட்டுகளை வாங்க முடிந்ததாக இணையவாசிகள் கூறினர்.
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருக்கும் இடையே பேருந்துச் சேவை வழங்கும் சிங்கப்பூரின் 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம், மலேசியாவின் ஹண்டால் இண்டா (காஸ்வே லிங்க்) நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் இணையப் பக்கங்களில் நேற்றுக் காலை 8 மணிக்கு பயணச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
பயணச்சீட்டுகளை வாங்க ஒரே நேரத்தில் அதிகமானோர் இணையப் பக்கங்களுக்குச் சென்றதால் அவர்களைக் கையாள மெய்நிகர் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டன.
அதிகரித்துள்ள தேவையைச் சமாளிக்க முடியாமல் இரு இணையப் பக்கங்களும் தடுமாறின. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக சிலர் கூறினர்.
பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்வதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்கியதாக சில பயனர்கள் கூறினர்.
'டிரான்ஸ்டார் டிராவல்' பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகளுக்கு 15 நிமிடங்கள் கொடுத்தது. ஒரு பயணத்திற்கு ஐந்து இடங்கள்வரை பதிவு செய்யலாம். காலை 8.23 மணிக்கு அடுத்த 30 நாள்களுக்கான அனைத்துப் பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவித்தது.
இடம் கிடைக்கும்போது பயனர்கள் பேருந்து சேவை நிறுவன இணையவாசலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று இணையத் தளம் பின்னர் கூறியது.
காலை 8 மணி முதல் காத்திருந்த பிறகு, மதியம் 2.48 மணிக்கு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிந்ததாக பேஸ்புக் பயனர் ஒருவர் தெரிவித்தார்.
ஹண்டல் இன்டா-வின் இணையத்தளத்தின் மெய்நிகர் காத்திருப்பு அறையில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் வரிசை பிடித்தனர். பயனர்களுக்கு இணையத் தளத்தில் நுழைய 10 நிமிடங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதுடன், அவர்களுக்கு முன் காத்திருப்போர் எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
திரு தனபால் முருகையா, 36, உள்ளிட்ட சிலர் இணையதளத்திற்குள் நுழைவதற்குள் அல்லது பணம் செலுத்துவதற்கு முன்பே வெளியேறும்நிலை ஏற்பட்டது. சில சமயங்களில், இணையத்தளம் செயலிழந்தது.
மாலை 6.20 மணி நிலவரப்படி, பயணச்சீட்டுகள் விற்பனைக்கு வந்ததிலிருந்து காஸ்வே லிங்க் இணையத்தளத்தில் காத்திருந்த போதிலும், திரு தனபாலுக்கு பயணச்சீட்டு கிடைக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ செய்தி கூறியது.
வரும் திங்கள் முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரையிலான பயணச்சீட்டுகள் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் என்று ஹண்டல் இன்டா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மலேசியப் பேருந்து சேவையின் செய்தித் தொடர்பாளர், அதிகாரி களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இரண்டாவது தொகுதி பயணச்சீட்டுகளுக்கான விற்பனை டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
சிங்கப்பூர்-மலேசியா தரைவழி விடிஎல் இம்மாதம் 29ஆம் தொடங்கும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என மலேசியாவில் இருந்து ஒவ்வொருநாளும் 1,440 பேர்வரை உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக சிங்கப்பூருக்கு வரவும் மலேசியா செல்லவும் முடியும்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்வதற்கான பேருந்துக் கட்டணம் பெரியவர்களுக்கு $15, சிறார்களுக்கு $8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வர, பெரியவர்களுக்கு 20 ரிங்கிட்டுக்கும் சிறுவர்களுக்கு 10 ரிங்கிட்டுக்கும் பேருந்துக் கட்டணம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.