அரசாங்க ஊழியர்கள் அனைவரும் ஒரு மாத ஆண்டிறுதி போனஸைப் பெறுவர் என்று என்று பொதுச் சேவைத் துறை அறிவித்துள்ளது.
இளநிலை ஊழியர்கள் கூடுதலாக ஒருமுறை மட்டும் வழங்கப்படும் $500 தொகையைப் பெறுவார்கள். எம்எக்ஸ்15, எம்எக்ஸ்16 தரநிலைகளுக்கு நிகரான பதவிகளில் இருப்போரும் 'ஓஎஸ்எஸ்' தரநிலை III, IV ஊழியர்களும் இந்தக் கூடுதல் தொகையைப் பெறுவார்கள்.
"கடந்த ஓராண்டு காலமாக, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தேசிய அளவிலான போரில் அரசாங்க ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்து வந்துள்ளனர். சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் அயராது பணியாற்றி வருகின்றனர்," என்று பொதுச் சேவைத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களது நீடித்த கடின உழைப்பையும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது பலதரப்பட்ட பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் போனஸ் வழங்கப்படுவதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதனுடன், வழக்கம்போல் அரசாங்க ஊழியர்கள் அனைவர்க்கும் 13வது மாத போனஸ் எனக் குறிப்பிடப்படும் ஆண்டு சம்பள நிரப்புத்தொகையும் (AWS) வழங்கப்படும்.

