தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டம் மேலும் ஆறு நாடுகளுக்கு
விரிவுபடுத்தப்படுகிறது.
அடுத்த மாத நடுப்பகுதியி
லிருந்து தாய்லாந்து, கம்போடியா, ஃபிஜி, மாலத் தீவு, இலங்கை, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூர் சிவில்
விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.
இவற்றுடன் சேர்த்து தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடங்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு இந்த 27 நாடு
களிலிருந்து அதிகமான பயணிகள் சிங்கப்பூர் வந்தனர்.
சாங்கி விமான நிலையம் வழி சிங்கப்பூருக்கு வரும் பயணிகளில் 60 விழுக்காட்டினர் இந்த நாடு
களிலிருந்து வந்தனர்.
புதிய பயணத் தடங்கள் சாங்கி விமான நிலையத்தின் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும். அத்துடன் உலகளாவிய தொடர்புடன் அனைத்துலக விமானப் போக்குவரத்து நடுவமாக சிங்கப்பூரின் நிலையை அது மீட்டுத் தரும் என்று ஆணையம் தெரிவித்தது.
அடுத்த மாதம் 14ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் தாய்லாந்திலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையலாம்.
கம்போடியா, ஃபிஜி, மாலத் தீவு, இலங்கை, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அடுத்த மாதம் 16ஆம் தேதியிலிருந்து இத்திட்டத்தின் வழி சிங்கப்பூருக்குள் நுழையலாம்.
இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள்
தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டால் போதும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 வயதும் அதற்கும் குறைவான சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்படுவர்.
ஆனால் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பயணம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவர்களது பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
எல்லைக் கட்டுப்பாடுகளின்கீழ் கொவிட்-19 அபாயமிக்க நாடுகள் பட்டியலில் தாய்லாந்து, கம்போடியா, ஃபிஜி, மாலத் தீவு, இலங்கை, துருக்கி ஆகிய நாடுகள் இரண்டாவது பிரிவில் இடம்பெறுகின்றன. இந்தப் பிரிவில் இடம்பெறும் நாடுகள் சிங்கப்பூரிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளிலும் பதிவாகும் கொவிட்-19 பாதிப்பு விகிதத்தைவிட குறைவான அல்லது அதே போன்ற விகிதத்தைக் கொண்டவை என்று ஆணையம் தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கம்போடியா, மாலத் தீவு, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அவற்றின் எல்லைகளை ஏற்கெனவே திறந்துவிட்டன. இந்த நான்கு நாடுகளுக்குச் செல்லும் தடுப்பூசி போட்டுக்கொண்ட
பயணிகள் தனிமைப்படுத்தப்பட
மாட்டார்கள்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்படாமல் தாய்லாந்துக்குப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஏற்பாட்டை கம்போடியா இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பயணிகளைத் துருக்கி தனிமைப்படுத்தாது.
இதற்கிடையே, சிங்கப்பூருடன் மேலும் 39 நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஃபிஜி தனது எல்லைகளைத் திறந்துவிட இருக்கிறது.
ஆறு ஐரோப்பிய நாடுகள் மீதான எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்
ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோவேஷியா, செக் குடியரசு, லெய்ட்டன்ஸ்டைன், சுலோவாக்கியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் மீதான எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து இந்த நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்குப் பத்து நாள் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த ஆறு நாடுகளிலும் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.