ஜொகன்னஸ்பர்க்: புதுவகை கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடியுள்ளதால், தென்னாப்பிரிக்காவில் இருந்து புறப்படும் கடைசி விமானங்களில் ஏறிவிட, சுற்றுப்பயணிகள் பலர் ஜொகன்னஸ்பர்க் விமான நிலையத்துக்குப் படையெடுத்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் பிரிட்டனுக்கு வரத் தடை விதிக்கப்படுவதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை பின்னேரம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுப்பயணிகள் பலரும் தென்னாப்பிரிக்காவில் தங்களது விடுமுறையைச் சுருக்கிக்கொண்டு தத்தம் நாடுகளுக்குத் திரும்ப அல்லாடுகின்றனர்.
பிரிட்டனைத் தொடர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவில் ‘ஓமிக்ரான்’ எனும் புதுவகை கொரோனா கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டில் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.