புதிய உருமாறிய கொவிட்-19 கிருமியான ஓமிக்ரானை சிங்கப்பூர் அணுக்கமாக கண்காணித்து வருகிறது. தளர்த்தப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.
இடர்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர். எனினும், சிங்கப்பூர் மக்கள் கடந்த ஈராண்டுகளாக கிருமிப்பரவலைக் கையாண்ட விதத்தில் முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிய திரு லீ, கொரோனோ கிருமியுடன் சிங்கப்பூர் வாழமுடியும் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் செயல் கட்சி (மசெக) மாநாட்டில் நேற்று உரையாற்றிய திரு லீ, ஓமிக்ரான் குறித்து முதல் முறையாகப் பேசினார்.
"சிங்கப்பூர் இதை மிக அணுக் கமாக கண்காணித்து வருகிறது. உறுதியாக எதுவும் தெரியவில்லை. ஆனால் சில அடிகள் முன்வைக்கும்போது, சில அடிகளைப் பின்வைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படலாம்.
"ஆனால், இதையெல்லாம் கடந்து, இறுதியில், கிருமியுடன் வாழ்வதற்கான வழியை சிங்கப்பூர் கண்டறியும். அனைத்தையும் பாதுகாப்பாக மீண்டும் தொடங்கும்," என்ற திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.
கவலைக்குரிய கொவிட்-19 கிருமியின் திரிபு என ஓமிக்ரானை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. வேகமாகப் பரவும் அபாயம் கொண்ட இந்த புதிய கொரோனா கிருமி குறித்து உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. பல நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணத் தடை விதித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவின் கௌடெங் மாநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானின் 'ஸ்பைக்' புரதத்தில் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் கண்டறியப்பட்டதால் இது கவலைக்குரிய ஒரு திரிபாக வகைப்படுத்தப்பட்டது
இதன் சில பிறழ்வுகள் காரணமாக இதற்கு பரவும் தன்மை, தொற்றும் தன்மை, உடலில் அதிகமான பாதிப்பை உண்டாக்கும் தன்மை ஆகியவை உள்ளன. ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுக்கும் மீண்டும் தொற்றும் வாய்ப்புள்ளது.
பல பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ள சிங்கப்பூர், தொற்று அளவைச் சமாளித்து வருகிறது. கடந்த வாரம், கடைகளில் உணவு உண்பது, வீடுகளுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஐவர்வரை ஒன்றுகூட அனுமதிக்கப்பட்டது. சில சமூகச் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
"கடந்த இரண்டு ஆண்டுகள், சிங்கப்பூரின் சுகாதார செயல்பாடுகளுடன் சமூகப் பிணைப்புகள், அரசியல் விருப்பங்களையும் சோதித்துள்ளன," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் செய்தி பக்கம் 2