நாளை முதல் புதிய நடைமுறை; விமான நிலையத்தில் கட்டாய 'பிசிஆர்' பரிசோதனை
சிங்கப்பூர் உட்பட கொவிட்-19 தொற்று அபாயமிக்க 12 நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது வீட்டிலேயே ஏழு நாள்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிகம் பரவக்கூடிய 'ஓமிக்ரான்' எனும் புதிய உருமாறிய கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டி நடைமுறைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அவை நாளை டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கின்றன.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்வோர், 'ஏர் சுவிதா' இணையப்பக்கத்தில் உள்ள உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசி 14 நாள்கள் தாங்கள் எந்நாடுகளில் இருந்தோம் என்ற விவரத்தையும் 'பிசிஆர்' பரிசோதனையில் 'கொவிட்-19 தொற்று இல்லை' என உறுதிப்படுத்தப்பட்டதற்கான சான்றையும் அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்குமுன் அவர்கள் கிருமிப் பரிசோதனை செய்துகொண்டிருக்க வேண்டும்.
கொரோனா அபாயமிக்கதாக இந்தியா வகைப்படுத்தியுள்ள 12 நாடுகளில் இருந்து செல்வோர் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். சிங்கப்பூர், சீனா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அந்நாடுகளிலிருந்து இந்தியா செல்வோர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும். முடிவு வரும்வரை அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியேறவோ அல்லது இணைப்பு விமானத்திற்குச் செல்லவோ முடியாது.
பரிசோதனையில் 'தொற்று இல்லை' என முடிவு வந்தால் அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர். ஆயினும், வீட்டிலேயே ஏழு நாள்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எட்டாம் நாளில் மீண்டும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் 'தொற்று இல்லை' என முடிவு வந்தாலும், அடுத்த ஏழு நாள்கள் அவர்கள் தங்களது உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும்.
விமான நிலையத்திலேயே கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்படும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படும். அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியானால், அவர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரி மரபணுச் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர் தனிமைப்படுத்தும் இடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் வழிகாட்டி நெறிமுறைகளின்படி அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
தொற்று உறுதியானோரின் நெருங்கிய தொடர்புகள் அரசாங்கம் குறிப்பிடும் இடத்தில் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பின்கீழ் வைக்கப்படுவர்.
கொரோனா அபாயமிக்க நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத மற்ற நாடுகளில் இருந்து செல்வோர் விமான நிலையத்தைவிட்டு வெளியேறலாம். அவர்கள் அடுத்த 14 நாள்களுக்குத் தங்களது உடல்நிலையைத் தாங்களாகவே கண்காணித்துக்கொள்ள வேண்டும்.