அதிகம் பரவக்கூடிய ‘ஓமிக்ரான்’ கொவிட்-19 கிருமி கண்டறியப்பட்டு இருப்பதன் எதிரொலியாக சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும்போதும், சமூக அளவிலான கட்டுப்பாடுகளில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
புதிய ‘ஓமிக்ரான்’ திரிபு குறித்து போதுமான தகவல்கள் தெரியவராத நிலையில், உள்ளூரில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டுமா என்பதை இப்போதே கூற இயலாது என்று திரு வோங் கூறினார்.
ஆனாலும், மாற்றங்களுக்கு ஏற்ப விரைந்து தங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய மனப்போக்கை சிங்கப்பூரர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான வோங் வலியுறுத்தி இருக்கிறார்.
“விரைவாக மாறிவரும் சூழலில், புதிய தகவல்களின் அடிப்படையில் நமது நடவடிக்கைகளைத் தொடந்து மறுஆய்வு செய்யவும் நிலைமைக்கேற்ப மாற்றியமைக்கவும் வேண்டும்,” என்றார் அமைச்சர்.
ஓமிக்ரானே கொரோனா திரிபுகளின் கடைசியாக இருந்துவிடாது என்ற அவர், “புதிய திரிபுகள் தோன்றலாம் என்பதால் அவற்றை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்றும் சொன்னார்.
பேரச்சுறுத்தலாக விளங்கவல்ல, தற்போதைய தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த இயலாமல் போகக்கூடிய புதிய கொரோனா திரிபு உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று திரு வோங் கூறினார்.
இத்தகைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், கிடைக்கும் தரவுகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு, விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்டு, தங்களது பங்கை ஆற்ற வேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போரை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்,” என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.