வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கான எல்லை நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
நாளை மறுதினம் வியாழக்கிழமை (டிசம்பர் 2) இரவு 11.59 மணியிலிருந்து பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான விதிமுறைகள் கடுமையாகின்றன.
உலகம் முழுவதும் ‘ஓமிக்ரான்’ கொரோனா கிருமி வகை பரவத் தொடங்கியுள்ள வேளையில், இங்கு எல்லை நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
உள்ளூரில் இதுவரை ஓமிக்ரான் கிருமி கண்டறியப்படவில்லை என்றாலும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை மதிப்பிட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்), நாளை மறுதினம் வியாழக்கிழமை இரவு 11.59 மணியிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வந்திறங்குவோர், கூடுதல் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
அதாவது, சிங்கப்பூர் வந்திறங்கிய மூன்றாவது, ஏழாவது நாளில் துரிதப் பரிசோதனை மையத்தில் ஒருவரின் மேற்பார்வையின்கீழ், ஆன்டிஜன் விரைவு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன்பும் இங்கு வந்திறங்கிய பிறகும் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, சிங்கப்பூருக்கு வரும் அல்லது சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் விமானப் பயணிகள், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு, அதில் ‘தொற்று இல்லை’ என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தற்போது, ஹாங்காங், மக்காவ், சீனா, தைவான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு வருவோர், புறப்பாட்டிற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை. சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டால் போதும். இந்தப் பகுதிகள் தொற்று அபாயம் குறைவுள்ள பகுதிகளாகக் கருதப்படுகின்றன.
மூன்றாவதாக, சிங்கப்பூர் வந்திறங்கும் அனைத்துப் பயணிகளும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஹங்காங், மக்காவ், சீனா, தைவான் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இருந்து ‘விடிஎல்’ திட்டத்தைப் பயன்படுத்தாமல் இங்கு வரும் பயணிகள் இந்த விதிமுறைக்கு உட்படுத்தப்படுவர்.
தற்போது, அத்தகையோர் சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இல்லத் தனிமை உத்தரவு முடிவடையும் தருணத்தில் அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது.