செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியிருப்பதை அது குறிக்கும்.
பாட்டாளிக் கட்சி நேற்று இரவு (நவம்பர் 30) இதைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தது.
தனது ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளைப் பற்றி கலந்தாலோசிக்க, கட்சியின் தலைவர்கள் நேற்றிரவு 8 மணிக்குச் சந்தித்ததாக பாட்டாளிக் கட்சி கூறியது.
திருவாட்டி ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஒப்புக்கொண்டதை அடுத்து, அதை விசாரிப்பதற்காக அந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்தின்போது, பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் புகார் அளிக்கச் சென்றபோது அந்தச் சம்பவத்தைப் போலிசார் தவறாகக் கையாண்டதாக திருவாட்டி ரயீசா கூறியிருந்தார்.
அந்தப் பெண்ணுடன் தானும் சென்றதாக அவர் அப்போது கூறினார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை என்று அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.
பாட்டாளிக் கட்சி அந்த விவகாரம் பற்றிய மேல்விவரம் அளிக்க இன்று (டிசம்பர் 1) செய்தியாளர் கூட்டத்தை நடத்தும்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை திருவாட்டி ரயீசா தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
திருவாட்டி ரயீசா, கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் செங்காங் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சி அணியில் ஒருவர் ஆவார்.