இந்தியாவில் இருவருக்கு ஓமிக்ரான் தொற்று

இந்தியாவில் இருவருக்கு ஓமிக்ரான் தொற்று

1 mins read
21a4940d-c175-4e91-a86f-92c1d507c3df
இந்தியாவில் இருவருக்கு ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றி இருக்கிறது. இரு சம்பவங்களும் கர்நாடகாவில் கண்டறிப்பட்டன. இந்நிலையில் பெங்களூர் விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் கிருமிப் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. -

இந்தியாவில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் வகைக் கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்தியாவில் ஓமிக்ரான் வகைக் கிருமி கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இரண்டு தொற்றுச் சம்பவங்களும் கர்நாடகா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லால் அகர்வால் இன்று (டிசம்பர் 2) புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஓமிக்ரான் தொற்றியவர்கள் இருவரும் ஆடவர்கள். ஒருவருக்கு வயது 46. மற்றவருக்கு வயது 66.

இரண்டு பேருக்கும் கடுமையான நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என்று திரு அகர்வால் கூறினார்.

மற்ற உலக நாடுகளில் ஓமிக்ரான் தொற்றியவர்களுக்கும் கடுமையான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று அவர் சுட்டினார்.

மேலும், ஓமிக்ரான் தொற்றிய இருவருடன் உடனடியாகவும் இரண்டாம்நிலையிலும் தொடர்புள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குக் கிருமிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓமிக்ரான் தொற்றிய இருவரில் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத இந்தியக் குடிமகன் என்று சில வட்டாரங்கள் கூறியதாக என்டிடிவி குறிப்பிட்டது.

இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொள்வதை அதிகரிப்பதே இப்போதைய தேவை என்று நித்தி ஆயோக் குழுவின் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே. பால் கூறினார்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளி வைக்கவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.