சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டம் (விடிஎல்) தொடரும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் மாணவி ஒருவருக்கு ‘ஓமிக்ரான்’ வகை கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமைச்சர் கைரி இதனை இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்திறங்கிய பயணிகள் இருவருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் ‘ஓமிக்ரான்’ தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்து இருந்தது.
“எனது சிங்கப்பூர் சகாவுடன் இன்று காலை பேசினேன். ‘விடிஎல்’ திட்டம் தொடரும் என்பதை நாங்கள் மறுஉறுதிப்படுத்தினோம். அன்றாட அடிப்படையில் ஒருவர் மற்றொருவரிடம் தெரியப்படுத்திக்கொண்டு எங்களது பதில் நடவடிக்கைகளை அதற்கு ஏற்றாற்போல ஒருங்கிணைத்துக்கொள்வோம்,” என்று விவரித்தார் திரு கைரி.
சிங்கப்பூரில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை மலேசியா உடனடியாக அமல்படுத்தும் என்பதை திரு கைரி மறுஉறுதிப்படுத்தினார். அந்தக் கட்டுப்பாடுகளில் கூடுதல் கொவிட்-19 பரிசோதனைகளும் அடங்கும். சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள், அங்கு சென்றதும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.
‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் மலேசியாவுக்கு வரும் பயணிகள், அவர்கள் வந்திறங்கிய மூன்றாவது மற்றும் ஏழாவது நாளில் கூடுதல் கொவிட்-19 விரைவு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று திரு கைரி நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.