சிங்கப்பூர்-மலேசியா இடையிலான 'விடிஎல்' பயண ஏற்பாடு
சிங்கப்பூர்- மலேசியா எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டு, முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூர்-மலேசியா இடையே தரைவழியாக பயணம் செய்ய அனுமதிக்கும் 'விடிஎல்' திட்டம் தொடங்கப்பட்டு முதல் ஐந்து நாள்களில் 5,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
அதே காலகட்டத்தில், வான்வழி 'விடிஎல்' திட்டத்தைப் பயன்படுத்தி மலேசியாவில் இருந்து 2,771 பேர் சிங்கப்பூர் வந்தனர்.
கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் மூடப்பட்டன. இதனால் வெகுகாலமாகக் குடும்பங்களைப் பிரிந்து இருப்பவர்கள் மீண்டும் ஒன்றிணைய ஏதுவாக சென்ற மாதம் 29ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி, தரைவழி 'விடிஎல்' பயண ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.
இதனையடுத்து, முதல் ஐந்து நாள்களில் இரு நாடுகளில் இருந்தும் 5,033 பேர் பிரத்தியேக பேருந்துச் சேவைகள் மூலமாக கடற்பாலத்தைக் கடந்தனர் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
இப்போதைக்கு, குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை உடையோர் மட்டுமே தரைவழி 'விடிஎல்' திட்டத்தின்கீழ் சிங்கப்பூர்-மலேசியா இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அன்றாடம் அனுமதிக்கப்படும் அதிகபட்ச எண்ணிக்கையைவிடக் குறைவானவர்களே பிரத்தியேகப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். ஒரு நாளைக்கு இரு திசைகளிலும் தலா 1,440 பேர் பயணம் செய்யலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிவரை, தரைவழி 'விடிஎல்' திட்டத்தின்கீழ் 4,343 பேர் சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்றனர்.
மாறாக, அதே காலகட்டத்தில் 690 பேர் மட்டுமே பேருந்து மூலமாக சிங்கப்பூர் வந்தனர்.
இதற்கிடையே, இம்மாதத்தில் சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
கடந்த 2ஆம் தேதி நிலவரப்படி, இம்மாதத்தின் கடைசி நான்கு நாள்களைத் தவிர்த்து மற்ற எல்லா நாள்களுக்கும் ஜோகூர் பாருவிற்குச் செல்வதற்கான பயணச்சீட்டுகளை விற்றுவிட்டதாக பிரத்தியேக இரு பேருந்துச் சேவைகளில் ஒன்றை இயக்கும் 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம் தெரிவித்தது.
அதேபோல, சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் பாரு செல்ல கிட்டத்தட்ட 24,000 பயணச்சீட்டுகளும் அங்கிருந்து சிங்கப்பூர் வர ஏறக்குறைய 14,500 பயணச்சீட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன என்று 'விடிஎல்' பேருந்துச் சேவையை வழங்கும் இன்னொரு நிறுவனமான 'ஹண்டால் இண்டா'வின் (காஸ்வே லிங்க்) பேச்சாளர் கூறினார்.
மலேசியா செல்வதற்கான 'ஹண்டால் இண்டா' பயணச்சீட்டுகளில் கிட்டத்தட்ட 90% விற்கப்பட்டுவிட்டதாக அவர் சொன்னார்.
இருப்பினும், ஆவணப் பிரச்சினைகளால் பயணச்சீட்டு வைத்திருந்தும் பயணிகள் பலர் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டதாக இரு நிறுவனங்களும் குறிப்பிட்டன.
விமானம் வழியாகப் பயணம் செய்த 2,771 பேரில் 1,773 பேர், பயண அனுமதி பெற்ற நீண்டகால மற்றும் குறுகியகால அனுமதி அட்டைதாரர்கள், 871 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள், 127 பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்று சிங்கப்பூர் சிவில் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

