சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு அதன் முடிவுக்காக காத்திருக்கும் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதோடு, அவர்கள் காத்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் பயணிகள் ஆறேழு மணிநேரம் வரையிலும் விரைவு பரிசோதனை செய்துகொள்ளும் பயணிகள் ஒரு மணிநேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதன்படி, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் பயணிகள் 5 முதல் 6 மணிநேரத்திற்குள்ளும் விரைவு பரிசோதனை செய்துகொள்ளும் பயணிகளுக்கு 30 முதல் 45 நிமிடங்களுக்குள்ளும் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்று உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் 20 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
அதனுடன், சுங்கச்சோதனை பிரிவில் கூடுதல் முகப்புகள் திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் கொவிட்-19 பரிசோதனை பகுதிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரிசோதனை முடிந்து காத்திருக்கும் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருக்கைகளின் எண்ணிக்கை 450ல் இருந்து 500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு, பானம் நியாயமான விலையில் கிடைக்க அப்பகுதியில் சிறுகடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனியறை, வைஃபை இணைய வசதி, இலவச தொலைபேசி வசதி, தொலைக்காட்சி வசதி, விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரத்தைக் காட்டும் திரை, நாணய மாற்று முகப்புகள் போன்ற சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 பயணிகளுக்கு கொவிட்-19 சோதனைகள் நடத்தப்படுகின்றன. பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் செய்துகொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.