சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான கடல்வழி 'விடிஎல்' பயணத்தடத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து வரும் ஜனவரியில் கலந்தாலோசிக்கப்படலாம் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது தெரிவித்து இருக்கிறார்.
அண்மையில் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தபோது, இருநாடுகளுக்கும் இடையே கடல்வழி 'விடிஎல்' திட்டத்தைத் தொடங்குவது குறித்த யோசனையை மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்வைத்ததாக திரு ஹஸ்னி சொன்னார்.
அத்திட்டத்தைப் பரிசீலிக்கலாம் என்று பிரதமர் லீ, அப்போது திரு இஸ்மாயிலிடம் கூறியிருந்தார்.
அத்திட்டத்திற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தால், அது குறித்து உடனடியாக கலந்தாலோசிக்க கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படலாம் என்று திரு ஹஸ்னி கூறினார்.
"இந்தச் சிறப்புப் பயணத் திட்டம், உள்ளூர் சுற்றுப்பயணத்துறையை நிச்சயமாக மேம்படுத்தும்," என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
ஜோகூரின் டெசாரு கோஸ்ட் படகு முனையத்திற்கும் சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்திற்கும் இடையே கடல்வழி பயணத்தடம் அமைக்கப்படலாம் என்று திரு ஹஸ்னி குறிப்பிட்டார்.
சென்ற மாதம் 29ஆம் தேதி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தரைவழி, வான்வழி பயணத்தடத் திட்டத்தைத் தொடங்கி வைக்க, மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.
அவ்விரு 'விடிஎல்' திட்டங்களின்கீழ், முதல் ஐந்து நாள்களில் மட்டும் 7,800க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தது.
இப்போதைக்கு தரைவழி 'விடிஎல்' திட்டத்தின்கீழ் பிரத்தியேக இரு பேருந்துச் சேவைகளின் வழியாக இரண்டு திசைகளிலும் நாளொன்றுக்குத் தலா 1,440 பேர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.