சிங்கப்பூரில் திங்கட்கிழமை (டிசம்பர் 6) 662 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் நால்வர் மரணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக 1,000க்குக்கீழ் குறைவாகப் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து வந்த இருவரிடம் ஓமிக்ரான் தொற்று இருக்கலாம் என ஆரம்பக்கட்ட பரிசோதனை தெரிவித்திருந்த நிலையில், அவர்களைத் தொற்றியிருப்பது ஒமிக்ரான்தான் என பின்னர் உறுதிசெய்யப்பட்டதாகவும் அமைச்சு தனது அன்றாட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“தேசிய பொதுச் சுகாதாரப் பரிசோதனைக் கூடம், அவ்விருவர் தொடர்பான ஒட்டுமொத்த மரபணு சோதனையை நடத்தி முடித்த பின்னர், அவர்களிடம் காணப்பட்ட தொற்று வகை ஓமிக்ரான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
“அந்த இருவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் இருமல் மற்றும் தொண்டை வறட்சி போன்ற இலேசான அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டன,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி சிங்கப்பூர் வந்திறங்கியது முதல் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் சமூகத்தில் அவர்கள் ஒன்றுகலக்கவில்லை என்றும் அமைச்சு கூறியது.
திங்கட்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 662 பேரில் 638 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள். 13 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்தவர்கள், எஞ்சிய 11 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவைப் பயன்படுத்தியோர் விகிதம் 51.2 விழுக்காட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 48 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. அதேபோல, வாராந்திர தொற்றுப் பரவல் விகிதமும் 0.66 என்பதிலிருந்து 0.64க்கு இறங்கியுள்ளது.
இந்த விகிதம் 1 என்று நீடித்தால் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாகப் பொருள். ஒரு வாரத்தின் சமூகக் கிருமித்தொற்று விகிதத்தை அதற்கு முந்திய வாரத்தோடு ஒப்பிட்டு இது கணக்கிடப்படுகிறது. ஆனால், கடந்த 24 நாட்களாக இது 1க்குக் கீழ் குறைந்துகொண்டே வருகிறது. சமூக அளவில் தொற்றுப் பரவல் வீழ்ச்சி அடைந்து வருவதையே இது உணர்த்துகிறது.
கொவிட்-19 தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் மாண்டதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட நான்கு பேரம் 81 வயதுக்கும் 97 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அமைச்சு கூறியுள்ளது. அவர்களுக்கு வெவ்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சு அதுபற்றி விவரிக்கவில்லை.
அவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் திங்கட்கிழமை வரை தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 763 ஆகிவிட்டது. அதேபோல கொவிட்-19 தொற்றியதாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 269,873 ஆகியுள்ளது.