பயணத்திற்கு முந்திய கொவிட்-19 பரிசோதனைக்காக, பயணிகளின் உமிழ்நீரைப் பரிசோதிக்கும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
வெளிநாடு செல்வோருக்கு உமிழ்நீர்ப் பரிசோதனைத் தெரிவை வழங்கும் நோக்கில், உள்ளூர் உயிர்மருத்துவ நிறுவனமான லூசன்ஸ், மருந்தகங்களுடனும் தொலைமருத்துவச் சேவை வழங்குநர்களுடனும் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளது.
தாங்கள் கொவிட்-19 உமிழ்நீர்ப் பரிசோதனை செய்துகொள்ளத் தகுதியானவர்களா என்பதை முடிவுசெய்ய, பயணிகள் தாங்கள் செல்லும் நாடுகளின் பயண ஆலோசனைக் குறிப்புகளைப் பார்க்கும்படி லூசன்ஸ் நிறுவனம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, இப்போதைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உமிழ்நீரைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணத்திற்கு முந்திய கொவிட்-19 பரிசோதனைகளை ஏற்றுக்கொள்கின்றன.
இம்மாதம் 2ஆம் தேதி உமிழ்நீர்ப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக லூசன்ஸ் தலைமை நிர்வாகி டான் மின் ஹான் குறிப்பிட்டார்.
'சேஃபர் சாம்பிள்' எனப்படும் உமிழ்நீர்ப் பரிசோதனைத் தொகுப்பு, தொடக்கத்தில் 'ஏ ஸ்டார்' அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டது. பின்னர் 2020 ஜூனில் அது ஒரு மருத்துவக் கருவியாக சுகாதார அறிவியல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டது.
சேகரிப்புக் குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஊற்றுக்குழல்வழி 2 மி.லி. உமிழ்நீர் சேகரிக்கப்படும்.
பின்னர் வேதிப்பொருள் கலந்துள்ள நிலைப்படுத்தும் திரவம் அடங்கிய போத்தலினுள் அது கலக்கப்பட்டு, பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும்.
இப்போதைக்கு அங் மோ கியோவில் கெய்ன்ஹெல்த் மருந்தகமும் 'மைடாக்' எனும் தொலைமருத்துவ நிறுவனமும் உமிழ்நீர்ப் பரிசோதனை சேவையை வழங்கி வருகின்றன. மேலும் பல மருந்தகங்களும் தொலைமருத்துவ நிறுவனங்களும் உமிழ்நீர்ப் பரிசோதனைச் சேவையை வழங்குவதற்கான திட்டங்கள் இடம்பெற்று வருவதாக டாக்டர் டான் கூறினார்.
உமிழ்நீர்ப் பரிசோதனை முடிவு 24 மணி நேரத்திற்குள் கிடைத்துவிடும். கட்டணமும் பயணத்திற்கு முந்திய 'பிசிஆர்' பரிசோதனையை ஒத்த அளவிலேயே இருக்கும்.

