மலேசியா தன் நாட்டுக்கு வரும் அனைத்துலகப் பயணிகளுக்கும் உள்ளூர் பயணிகளுக்கும் கொவிட்-19 நிபந்தனைகளை மூன்று பயணத் திட்டங்களின்கீழ் திருத்தி அமைத்து இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான விமான, தரைவழிப் பயணத் திட்டம் (விடிஎல்), லங்காவி அனைத்துலக பயணத் திட்டம், குறுகிய வர்த்தகப் பயணிகளுக்கான ஓரிடச் சேவை நிலையம் ஆகிய பயணத் திட்டங்களின் கீழ் மலேசியா வருவோர், ஆறு நாட்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும். சிங்கப்பூரில் இருந்து செல்லும் பயணிகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்.
இந்த நிபந்தனைகள் டிசம்பர் 9ஆம் தேதி (இன்று) முதல் நடப்புக்கு வரும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்தார்.
மலேசியாவில் தரையிறங்கியதற்கு பிறகு இரண்டாவது, நான்காவது, ஆறாவது நாளில் ஆர்டிகே-ஏஜி (சுயபரிசோதனை) அவர்கள் உட்பட வேண்டும்.
மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் நிபுணத்துவ ஆர்டிகே-ஏஜி பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ள வேண்டும்.
லங்காவி பயணத் திட்டத்தின்கீழ் வருவோர் அந்தத் தீவை விட்டு புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரம் முன்னதாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பரிசோதனை முடிவுகள் அனைத்தும் MySejahtera செயலி வழியாக தெரிவிக்கப்பட வேண்டும்.
பயணிகள் அனைவரும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கவேண்டும். பயணத் தேதிக்கு குறைந்தபட்சம் 48 மணி நேரம் முன்னதாக அவர்கள் பிசிஆர் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மலேசியாவுக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்னதாக பிசிஆர் பரிசோத னைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கைரி தெரிவித்தார். அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தின்போது எப்போதுமே மின்னிலக்கத் தடமறியும் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டு இருக்கும் எட்டு நாடுகளில் இருந்து வரும் மலேசியக் குடிமக்கள், நீண்டகால அனுமதிதாரர்கள் உள்ளிட்ட சுற்றுப்பயணிகள் அனைவரும் குறிப்பிட்ட இடங்களில் 14 நாட்கள் கட்டாயமாக தனிமையில் தங்கி இருக்கும்போது மின்னிலக்க தடமறியும் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்.