இந்திய முப்படைத் தலைமைத் தளபதியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தமிழ்நாட்டில் நேற்று கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த 13 பேர் கொல்லப்பட்டதாக விமானப் படை தெரிவித்தது. மாண்டவர்களில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தும், 63, அவரின் மனைவி மதுலிகா ராவத்தும் அடங்குவர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கவிருந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முப்படைத் தலைமைத் தளபதி அவரின் மனைவி, ராணுவ உயரதிகாரிகள் உட்பட மொத்தம் 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். 13 பேர் இறந்து விட்டனர், ஒருவர் குறித்த விவரம் தெரியவில்லை.
கோவை மாவட்டம், சூலூரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டர் வெலிங்டன் நோக்கிக் கிளம்பியது. குன்னூர் மலைப் பகுதியில் உள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே அந்த எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் பறந்தபோது மேகமூட்டம் காரணமாக அது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கீழே விழுந்து தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தை அடுத்து உயர் ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் அங்கு செல்லவிருந்ததாகவும் நேற்றுத் தகவல்கள் தெரிவித்தன.
விபத்து பற்றி உயர்மட்ட விசார ணைக்கு விமானப் படை உத்தர விட்டது. புதுடெல்லியில் பிரதமர் மோடி, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசரக் கூட்டம் நடத்தினர்.
விபத்து குறித்து ராணுவத் தலைவர் மூலம் பிரதமர் மோடிக்குத் தற்காப்பு அமைச்சர் விளக்கினார்.
புதுடெல்லியிலுள்ள ஜெனரல் ராவத் வீட்டிற்கு நேற்று சென்ற அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் விபத்து பற்றி விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் கூறின.