கொவிட்-19 தொற்று அபாயமிக்க நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை இந்தியா நீக்கி விட்டது.
இதனையடுத்து, சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள், தாங்கள் தரை இறங்கும் விமான நிலையங்களில் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. அதன்பின், தங்களது வீட்டிலேயே ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிராது.
இப்போதைக்கு, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, கானா, மொரீஷியஸ், தான்சானியா, ஸிம்பாப்வே ஆகியவற்றை கொவிட்-19 தொற்று அபாயமிக்க பகுதிகளாக இந்தியா வகைப்படுத்தியுள்ளது.
முன்னதாக, உருமாறிய 'ஓமிக்ரான்' கிருமி அச்சுறுத்தலை அடுத்து, இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து தொற்று அபாயமிக்க நாடுகளில் இருந்து செல்வோருக்கு இந்தியா கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தது. அப்போது, சிங்கப்பூரும் அப்பட்டியலில் இடம் பெற்று இருந்தது.
அதன்படி, தொற்று அபாயமிக்க நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள், விமான நிலையத்தில் கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 'கொரோனா தொற்று இல்லை' என்று உறுதியான பின்னரே அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியேற அல்லது இணைப்பு விமானத்திற்குச் செல்ல முடியும்.
வீட்டில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டபின் எட்டாம் நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் 'தொற்று இல்லை' என முடிவு வந்தாலும், அடுத்த ஏழு நாள்களுக்கு அவர்கள் தங்களது உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.
ஒருவேளை விமான நிலைய கொரோனா பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவரது மாதிரி மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்படும். பின்னர் அவர் பிரத்தியேக இடத்தில் தனிமைப் படுத்தப்படுவார்.
சிங்கப்பூர்-இந்தியா இடையே கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டம் (விடிஎல்) நடப்பில் இருக்கிறது. அதன்கீழ், நாள்தோறும் சென்னை, டெல்லி, மும்பையில் இருந்து தலா இரண்டு விமானங்கள் சிங்கப்பூருக்கு இயக்கப்படுகின்றன.

