சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது முதற்கட்டப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
முதலாமவர், சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் முன்களப் பணியாளராவார். உள்ளூரில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
இரண்டாமவர், வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர். சுகாதார அமைச்சு வியாழக்கிழமை இரவு (டிசம்பர் 9) இதனைத் தெரிவித்தது.
இருவரும் முதலிரு தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டவர்கள். ஒருவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. மற்றொருவரிடம் இலேசான அறிகுறிகள் இருந்தன.
அந்த முன்களப் பணியாளர், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 3ல் பயணி சேவை ஊழியராகப் பணிபுரியும் 24 வயது சிங்கப்பூர் மாது. அவர் டிரான்சிட் பகுதியிலும் பணியாற்றினார். ஓமிக்ரான் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளில் இருந்து இங்கு வந்த பயணிகளுடன் அவர் உரையாடியிருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.
இரண்டாமவர், 46 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி. தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு அந்த மாது சிங்கப்பூர் வந்திறங்கினார்.
டிசம்பர் 4ஆம் தேதி பயணத்திற்கு முந்திய பரிசோதனையிலும் டிசம்பர் 6ஆம் தேதி சிங்கப்பூர் வந்ததும் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் ‘தொற்று இல்லை’ எனத் தெரியவந்தது.
அதற்கு அடுத்த நாள் சளி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவரிடம் சென்றார்.
டிசம்பர் 8ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அவரிடம் ஓமிக்ரான் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
மேற்கூறப்பட்ட இருவரின் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணி தொடர்கிறது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பிரத்தியேக இடத்தில் 10 நாள்கள் தனிமைப்படுத்தபடுவர். அவர்களுக்குப் பரிசோதனைகளும் நடத்தப்படும் என்று அமைச்சு கூறியது.
“வேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரான் திரிபு, உலகின் பல பகுதிகளுக்குப் பரவி வருவதால், நமது எல்லைகளிலும் சமூகத்திலும் கூடுதலானோரை அத்திரிபு தொற்றுவதை எதிர்பார்க்க வேண்டும்,” என்று அமைச்சு சொன்னது.