முதலமைச்சர் தொடங்கி கடைநிலை அரசாங்க ஊழியர்வரை அனைவரும் முன்னெழுத்தையும் (இனிஷியல்) கையெழுத்தையும் தமிழிலேயே போடவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1956ஆம் ஆண்டு நடைமுறைப்
படுத்தப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என 1978 ஜூன் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து 1998 செப்டம்பரில் தந்தை, தாய் மற்றும் ஊர் பெயர்களை முன்னெழுத்தாக எழுது வோர் அதனைத் தமிழிலேயே எழுத வேண்டும் என்று அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசு உத்தரவிட்டது.
ஆனால், முன்னெழுத்து, கையெழுத்து ஆகியவற்றைத் தமிழில் எழுத வேண்டும் என்று பிறப்பிக்கப் பட்ட இந்த இரு உத்தரவுகளும் சரிவரப் பின்பற்றப்படவில்லை.
"எனவே முன்பு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படியும் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலும் முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள்வரை அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து இனங்களிலும் தங்களின் பெயரை எழுதும்போதும் கையொப்பமிடும்போதும் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் ஆணை பிறப்பிக்கலாம்," என தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தெரிவித்திருந்தார்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே, தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இவரது கருத்தை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, அதற்கான ஆணையை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளதுடன் இந்த உத்தரவு உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
"தமிழின் பெருமை, முன்னெழுத்தையும் கையொப்பத்தையும் தமிழில் இடுவதில் உள்ள பெரு
மிதம் ஆகியவற்றை சுவரொட்டிகள் அமைத்து தெரியப்படுத்த வேண்டும்" என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

