சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை வேகமாகப் பரவி வருவதால், சிங்கப்பூரில் அதிகளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் தயார்நிலையில் இருக்கவும் இந்தத் தடுப்பூசி போடும் நடவடிக்கை மிகவும் முக்கியம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
ஐந்து வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறாரும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தின இரவு அறிவித்தது.
அத்துடன், 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு முன்பு முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்
கொண்டிருக்க வேண்டும்.
"டெல்டா கிருமிவகையைவிட ஓமிக்ரான் மிக எளிதாக, வேகமாகப்
பரவக்கூடியது என்று ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, கண் மூடி திறப்பதற்குள் அந்த வகை கிருமி உலகமெங்கும் பரவிவிடும். டெல்டா கிருமிவகையைவிட அது
பலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்
சாத்தியம் உள்ளது.
"எனினும் டெல்டாவைவிட ஓமிக்ரான் இலேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்கட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இருப்பினும், வேகமாகப்
பரவும் தன்மையை ஓமிக்ரான் கொண்டிருப்பதால் சிங்கப்பூரில் சிலருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டாலும் அது நமது சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு மிகக் கடுமையான அழுத்தத்தை ஏற்
படுத்தக்கூடும்," என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்
குழுவின் இணைத் தலைவரான திரு ஓங் கூறினார்.
இம்மாதம் இறுதியிலிருந்து ஐந்து வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறார், ஃபைசர் பயோஎன்டெக்/கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். புதிய தடுப்பூசி மருந்துகள் சிங்கப்பூர் வந்ததும் இப்பிரிவினருக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றவர்களைவிட இப்பிரிவினருக்குக் குறைவான அளவிலான தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதும் அதற்கும் மேற்பட்டோருக்குச் செலுத்தப்படும் அளவைவிட மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஐந்து வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்குப் போடப்படும்.
முதல் தடுப்பூசி போட்டு குறைந்தது 21 நாள்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்றார் திரு ஓங். இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அமைச்சர் ஓங் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறுபவர்கள் உடனடியாக அதைப் போட்டுக்கொள்வது நல்லது என்று அவர் ஊக்குவித்தார்.
சிங்கப்பூரில் தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்தைக் காட்டிலும் மொடர்னா தடுப்பூசி மருந்து அதிகம் இருப்பதாக அமைச்சர் ஓங் கூறினார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கூடுதல் தடுப்பூசி மருந்து
சிங்கப்பூர் வந்தடையும் என்று அவர் தெரிவித்தார்.
"காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களை சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றால் உடனடியாக அதைப் போட்டுக்கொள்ளவும். அது எந்த வகை பூஸ்டர் தடுப்பூசி மருந்தாக இருந்தாலும் சரி. இதுவே ஓமிக்ரானை எதிர்கொள்ளத் தயாராவதற்கு ஒரே வழி," என்று அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சிங்கப்பூர் ஊழி
யரணியில் 97 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இம்மாதம் 5ஆம் தேதி நில
வரப்படி 75,000 ஊழியர்கள் மட்டுமே இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் மனிதவள அமைச்சு கூறியது.
153,000 அரசாங்க அதிகாரிகளில் 99 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

