மின்சாரக் கட்டண விலையேற்றத்தினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் கடைத்தொகுதிகள், உற்பத்தி ஆலைகள் போன்ற பயனீட்டாளர்களுக்கு உதவ, புதிய ஏற்பாடு ஒன்றை எரிசக்திச் சந்தை ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
புதிய தற்காலிக எரிசக்தி ஒப்பந்த ஆதரவுத் திட்டத்தின்கீழ், முன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தலாம்.
இதன்படி கிலோவாட்டுக்கு ((kWh) அதிகபட்ச கட்டணம் 39.7 காசாக இருக்கும்.
பயனீட்டாளர்களுக்கும் மின்சார விநியோகிப்பாளர்களுக்கும் இடையிலான பேரப் பேச்சுகளின்போது கட்டணம் உறுதிசெய்யப்படும். இத்திட்டத்தில் இடம்பெறும் மின்சார விநியோகிப்பாளர்களான 'கெனெக்கோ', 'செம்கார்ப் பவர்', 'செனோக்கோ எனர்ஜி சப்ளை' ஆகிய நிறுவனங்கள் இடம்பெறுகின்றன என்று எரிசக்திச் சந்தை ஆணையம் கூறியது.
மாறா விலை அடிப்படையிலான இந்த ஒப்பந்தம் 2022 ஜனவரி மாதம் வரை செல்லுபடியாகும்.
எனினும், தேவை இருந்தால் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம்.
திட்டத்தில் இடம்பெறுவது கட்டாயமல்ல.
ஏறி இறங்கும் மின்சாரக் கட்டணத்தின் பாதிப்பைக் குறைக்க விரும்பும் அதேநேரத்தில், மின்சார ஒப்பந்தங்களை உறுதிசெய்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு இத்திட்டம் நல்ல தெரிவாக இருக்கும் என்றது ஆணையம்.
சராசரியாக மாதத்திற்கு குறைந்தது 4,000 கிலோவாட் யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் பெரிய பயனீட்டளர்களாகக் கருதப்படுகின்றனர். 4,000 கிலோவாட் மின்சாரம் என்பது, நான்கறை அடுக்குமாடி வீடு பயன்படுத்தும் சராசரி மாதாந்திரப் பயனீட்டைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம். கடைத்தொகுதிகள் போன்ற பெரிய வர்த்தகக் கட்டடங்கள் பெரிய பயனீட்டாளர்களாகக் கருதப்படுகின்றன.
தற்போது இந்தப் பயனீட்டாளர்கள், சில்லறை விற்பனையாளர் களிடமிருந்து அல்லது, ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கு மாறும் விலைகளைக் கொண்ட மொத்த விற்பனை சந்தையிலிருந்தே மின்சாரத்தை வாங்க வேண்டும்.
குடும்பங்களுக்கு மூன்றாவது தெரிவு உள்ளது. 'சிங்கப்பூர் பவர்' குழுமத்திடம் இருந்து நெறிப்படுத்தப்பட்ட கட்டணத்தில் மின்சாரத்தை வாங்கலாம். இதற்கான கட்டணம் தற்போது கிலோவாட்டுக்கு 25.80 காசாக உள்ளது.
சில்லறை விற்பனையாளர்களுடன் பேரம் பேசும் வலு உள்ளதால், அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் இந்தச் சேவையைப் பெறமுடியாது.
அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூர் உள்பட உலக நாடுகள் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டன. மொத்த விநியோகச் சந்தையில் மின்சாரத்தின் சராசரி விலை யூனிட்டுக்கு 50 காசாக உயர்ந்தது. செப்டம்பரில் இந்த விலை 16 காசாக இருந்தது.
பயனீட்டாளர்களில் கிட்டத்தட்ட ஒரு விழுக்காட்டினர் மொத்த விநியோகச் சந்தையில்இருந்து நேரடியாக மின்சாரம் வாங்குகின்றனர்.
தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில், எரிசக்தி விலை அதிகரிப்பிலிருந்து சிங்கப்பூர் முற்றிலும் தப்பிவிட முடியாது என்றார் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்.
"ஆனால், பயனீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தையும் திட்டங்களையும் பெறுவதை சிங்கப்பூரால் தொடர்ந்து உறுதிசெய்ய முடியும். இந்த வகையில் புதிய திட்டம் மற்றொரு படியாகும்," என்றார் அவர்.
"பாதிக்கப்படக்கூடிய பயனீட்டாளர்கள், அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க ஆதரவு அளிக்கப்படும். பயனீட்டாளர்களும் தங்களால் இயன்றவரை மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, மின்சாரத்தைச் சேமிப்பதில் உதவுவார்கள் என்று நம்புகிறோம்," என்று டாக்டர் டான் கூறினார்.