ஓமிக்ரான் கிருமித்தொற்று அலைக்கு சிங்கப்பூர் தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறது.
கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்படும் அதே வேளையில், அடுத்து வரக்கூடிய கொவிட்-19 அலையைக் கடக்க, மருத்துவமனை மற்றும் பரிசோதனை ஆற்றல் மேம்படுத்தப்படுகின்றன.
சமூகத்தில் இதுவரை ஓமிக்ரான் திரிபு இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், அது எப்போது நிகழும் என்பதே கேள்வி என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“ஓமிரான் திரிபு வேகமாகப் பரவக்கூடியது என்பதால், கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். எனவே, அத்தகைய ஒரு சூழலுக்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
இதன் பொருட்டு, தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையில் வேறுபடுத்தப்படும் நடைமுறைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இருந்து கூடுதல் இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
அடுத்துவரும் கிருமித்தொற்று அலைக்குத் தயாராக, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை 500ஆக உயர்த்த திட்டமிடப்படுகிறது என்று மருத்துவச் சேவை பிரிவு இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
இந்த ஏற்பாட்டிற்கு ஆதரவளிக்க, பொது மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.