உலகமெங்கும் வேகமாகப் பரவி வரும் ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகையை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராகி வருகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில் ஓமிக்ரான் அலை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க இந்த நட
வடிக்கைகள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையும் பரிசோதனை ஆற்றலும் அதி
கரிக்கப்படும்.
சிங்கப்பூரில் இதுவரை யாருக்கும் சமூக அளவில் ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்றபோதிலும் கூடிய விரைவில் அத்தகைய நிலை ஏற்படும் என்று நேற்று நடைபெற்ற கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.
"சிங்கப்பூரில் இருக்கும் யாராவது ஒருவருக்கு ஓமிக்ரான்
கிருமித்தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென உயரக்கூடும். ஓமிக்ரானின் மிக எளிதில், வேகமாகப் பரவும் தன்மையே இதற்குக் காரணம். எனவே, அத்தகைய சூழலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை வேகமாகப் பரவக்கூடியது என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி தொடர்பில் வேறுபடுத்தப்பட்ட பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகள் கூடுதல் இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும். அதே வேளையில், சிங்கப்பூர் ஊழியரணியில் 97 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் வேலையிடங்களுக்குத் திரும்ப கூடுதல் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களுக்குத் திரும்ப தற்போது வீட்டில் வேலை செய்து வருவோரில் 50 விழுக்காட்டினருக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில், கொவிட்-19 பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் வேலையிடம் திரும்ப வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இதுவரை 16 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் 14 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். எஞ்சிய இருவர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் சேவைப் பிரிவில் பணிபுரியும் இரண்டு உள்ளூர் ஊழியர்கள்.
டெல்டா கொவிட்-19 கிருமியைவிட பெரிய அளவிலான கொவிட்-19 அலையை ஓமிக்ரான் கிருமிவகை ஏற்படுத்தக்கூடும் என்று திரு வோங் எச்சரிக்கை விடுத்தார்.
எனவே, தற்போது நடப்பில் உள்ள பாதுகாப்பு நிர்வாக நட
வடிக்கைகள் தொடரும் என்றார் அவர். அடுத்த கொவிட்-19 அலைக்குத் தயாராகும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 500ஆக உயர்த்த நட
வடிக்கைகள் எடுக்கப்படுவதாக மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்,
இதைச் சாத்தியமாக்க பொது மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயப்
படுவதாக அவர் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதிக்கட்டத்தில் டெல்டா கொவிட்-19 கிருமித்தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தபோது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஏறத்தாழ 280 படுக்கைகள் இருந்தன. படுக்கைகளின் எண்ணிக்கையை 350ஆக உயர்த்த மருத்துவமனைகள் அப்போது தயார்நிலையில் இருந்தன. தேசிய தடுப்பூசித் திட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது, சுகாதாரப் பராமரிப்புத் திறன்களை அதிகரிப்பது, அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளும் பழக்கத்தை ஊக்குவிப்பது ஆகியவை எவ்வாறு நடைமுறைப்
படுத்தப்படும் என்பது குறித்து பணிக்குழு தெரிவித்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையில்லாது, வீட்டிலேயே குணமடையக்கூடியோருக்கு உதவுவதில் தனியார் மருத்துவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும். அதுமட்டுமல்லாது, சமூக சிகிச்சை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதன்மூலம் சீரான உடல்நிலை கொண்ட நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து அங்கு அனுப்பப்படலாம். மேலும் 60 விரைவுப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும். அவற்றை தனியார் நிறுவனங்கள் நடத்தும். இதன்மூலம் கொவிட்-19 பரிசோதனையை அனைவரும் எளிதில் செய்துகொள்ளலாம்.
ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை எளிதில் அடையாளம் காண கட்டாய பரிசோதனைகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மானியம் வழங்கப்படும்.

