சிங்கப்பூரும் மலேசியாவும் தரை எல்லை வழியாக தனிமை உத்தரவில்லாமல் சென்று வரக்கூடிய பயணத் திட்டத்தை (விடிஎல்) விரிவுபடுத்துகின்றன.
இதன் விளைவாக இம்மாதம் 20ஆம் தேதியில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் குடிமக்கள் கடற்பாலம் வழியாக மலேசியாவுக்குச் சென்று வர முடியும்.
அதேபோல தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய குடிமக்களும் கடற்பாலம் வழி சிங்கப்பூருக்கு வந்து செல்ல முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்ட விரிவாகத்தின்கீழ் இது சாத்தியமாகிறது.
இப்போது சிங்கப்பூரின் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப் போர் மட்டுமே இங்கு வர இந்த ஏற்பாட்டின்கீழ் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதேபோல, மலேசிய நாட்டின் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் மட்டும் மலேசியா செல்ல முடியும்.
இந்தப் பயண ஏற்பாட்டின்கீழ், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடைமுறைப்படுத்தப்படும் பரிசோதனை ஏற்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவரும் நடப்பில்
இருக்கக்கூடிய பரிசோதனை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் இங்கு வந்ததும் ஏழு நாள் கொவிட்-19 ஏஆர்டி பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
ஏழாவது நாள் வரை அவர்கள் சுயமாக ஏஆர்டி பரிசோதனையை அன்றாடம் செய்து கொள்ள
வேண்டும்.
மூன்றாவது நாளிலும் ஏழாவது நாளிலும் அவர்கள் பரிசோதனை நிலையத்துக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
அதேபோல, மலேசியா செல்வோர், அந்த நாட்டின் நடப்பு விதிமுறைகளுக்கு இணங்க, ஆறு நாட்களுக்கு அன்றாட பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட விடிஎல் பயணத் திட்டம் நவம்பர் 29ல் தரைவழியாகவும் ஆகாய வழியாகவும் தொடங்கியது.
இதனிடையே, கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், தனிமை உத்தரவில்லாத பயணத் திட்டத்திற்கு எந்த அளவுக்குத் தேவை இருக்கிறது என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்று கூறினார். அதற்கேற்ப அவர்கள் திருத்தங்களைச் செய்வார்கள் என்றார் அவர்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டம் விரிவடைகிறது என்றாலும் இது இரு நாடு
களுக்கும் இடையில் எல்லைகளை முற்றிலும் திறப்பதாக இராது என்றார். இப்போதைய தரைவழி விடிஎல் ஏற்பாட்டின்படி இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட 64 பேருந்து சேவைகள் வழியாக 2,880 பேர் பயணம் செய்ய வரம்பு உள்ளது.
குடும்பத்தினரை நேரில் பார்க்க முடியாமல் நீண்ட நாள்களாகத் தவித்து வருபவர்களை ஒன்றுசேர வைப்பதே இந்தத் தனிமைப்படுத்த தேவையில்லாப் பயணத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்று திரு கான் தெரிவித்தார்.
இருப்பினும், ஒன்றுக்குப் பலமுறை யோசித்த பிறகு மலேசியாவுக்குத் தரைவழி பயணத்தை மேற்கொள்ளவும் அவர் சிங்கப்
பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

