பிள்ளைப் பருவத்திலிருந்தே ஒற்றைப் பெற்றோரான தம் தாயாருக்குத் தைரியமூட்டி, தம்பிக்குத் தட்டிக்கொடுத்த நட்டேஷ் ரூபன், 16, தமக்கு நெருக்கமானோர் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வில் ஏழு புள்ளிகளுடன் சிறந்த தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் பாட அட்டவணை தயாரித்து அதன்படி செயல்பட்டது நல்ல பலனைத் தந்திருப்பதாக மெரிடியன் உயர்நிலைப் பள்ளி மாணவரான நட்டேஷ் தெரிவித்தார்.
முந்தைய ஆங்கிலத் தேர்வுகளில் தொடர்ந்து 'பி3' எடுத்து வந்த வழக்கநிலை ஏட்டுக்கல்வி மாணவர் நட்டேஷ், ஆங்கிலத் தேர்வுத்தாள்களை அதிகம் பயிற்சி செய்ததுடன், தரமான ஆங்கிலக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்தார்.
மொழித்திறனைச் சரியாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தால் சுயமாகவே அக்கட்டுரைகளின் மொழிக்கூறுகளை ஆராய்ந்ததாகவும் நட்டேஷ் தெரிவித்தார். 'என்' நிலைத் தேர்வில் நடேஷ் பெற்ற உச்சபட்ச தேர்ச்சியான 'ஏ1' தம்மை மிகவும் நெகிழ வைத் ததாக அவரது ஆங்கில ஆசிரியர் தன்யா கண்ணன், 43, கூறினார்.
பொதுக்கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வு முடிவுகளை நேற்று பெற்ற 13,635 மாணவர்களில் நட்டேஷும் ஒருவர். 2009 முதல் ஆகச் சிறந்த வழக்கநிலைத் ேதர்ச்சியை இந்த ஆண்டு வழக்கநிலை ஏட்டுக்கல்வி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டின் முடிவுகள் பொதுவாகவே சிறப்பாக உள்ளன. இந்த ஆண்டு தேர்வுகளை எழுதிய 9,407 மாணவர்களில் 79.2% உயர்நிலை ஐந்திற்குச் செல்ல தகுதிபெற்றனர். இந்த விழுக்காடு கடந்தாண்டு 77.7 விழுக்காடாக இருந்தது.
2009ஆம் ஆண்டு உயர்நிலை ஐந்துக்குத் தேர்ச்சிபெறும் தகுதி நிலை மாற்றப்பட்டதை அடுத்து அதிகமான எண்ணிக்கை இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதமாகும். 2009ல் தேர்வு எழுதிய மாணவர்களில் 71.1% உயர்நிலை ஐந்துக்குத் தகுதிபெற்றனர். இந்த விகிதம் படிப்படியாக ஏறுமுகமாக உள்ளது.
வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மாணவர்களும் வழக்கநிலை (தொழில்நுட்பம்) மாணவர்களும் எழுதிய தேர்வின் முடிவுகளைக் கல்வியமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக்கழகமும் வெளியிட்டன. தேர்வு எழுதிய 4,228 வழக்கநிலை தொழில்நுட்ப மாணவர்களில் 98.1% தேர்ச்சியடைந்தனர்.
மேலும் செய்தி: பக்கம் 4

