கொவிட்-19 பெருந்தொற்று 2024 வரை நீடிக்கலாம் என்று தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் முன்னுரைத்துள்ளது.
2024ஆம் ஆண்டுவாக்கில் கொவிட்-19 நிரந்தர நோயாக மாறலாம் என்று அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) கூறினர்.
அதாவது, பெருந்தொற்று எனும் உலகளாவிய அவசர நிலையிலிருந்து வட்டார அளவில் தொற்றுக் குழுமங்களை ஏற்படுத்தும் சளி/காய்ச்சல் போன்ற நிரந்தர நோயாக கொவிட்-19 வருங்காலத்தில் மாறலாம் என்பது அவர்களின் கணிப்பு.
கிருமி தொடர்ந்து பரவினாலும் தொற்றால் பாதிக்கப்படுவோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர், மரணமடைவோர் ஆகியோரின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்படும்போது, கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டியதாகக் கருதப்படும்.
அந்த நிலையை எட்டுவதற்கு, உலக மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் மூலம் அல்லது முந்திய தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்ததன் மூலம் போதுமான அளவு நோயெதிர்ப்பாற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.
கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டுவதற்கான காலகட்டம், இடத்திற்கு இடம் வேறுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
“அடுத்த ஓரிரு ஆண்டில் உலகின் சில பகுதிகளில், கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டும். வேறு சில பகுதிகளிலோ, அது தொடர்ந்து பெருந்தொற்றாக நீடிக்கக்கூடும்,” என்றார் ஃபைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கல் டோல்ஸ்டன்.