மலேசியாவில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பத்துப் பேர் உயிரிழந்தனர். அவர்களில் எட்டுப் பேர் சிறுவர்கள். இலிட் விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 11.42 மணிக்கு விபத்து நடந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறை இயக்குநர் நோர்ஸாம் கமிஸ் கூறினார்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் அவை இரவு 11.54 மணிக்கெல்லாம் சம்பவ இடத்தை அடைந்துவிட்டதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.
இழுவை லாரியும் மூன்று கார்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகக் கூறிய அவர், மோதிய கார்களில் ஒன்றான புரோட்டோ விராஸ் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
கார் ஒன்றை நசுக்கிய நிலையில் இருந்த இழுவை லாரியை அப்புறப்படுத்த பாரந்தூக்கி வரவழைக்கப்பட்டது. மற்றொரு காரில் இருந்த ஆடவர் ஒருவரின் கால் முறிந்தது.
ஓர் ஆடவர், ஒரு பெண், ஐந்து சிறுவர்கள், மூன்று சிறுமியர் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஷா அலாம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இழுவை லாரி ஓட்டுநரும் அவருடன் இருந்த இரு பிள்ளைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்தில் சம்பந்தப்பட்ட 17 பேரில் 10 பேர் மாண்டுவிட்டதாகவும் மீட்புப் பணிகள் பின்னிரவு 2.40 மணி வரை நீடித்ததாகவும் திரு நோர்ஸாம் கூறினார்.

