பேட்மிண்டன் உலகப் போட்டியின் இறுதிச்சுற்றில் முதன்முறையாக சிங்கப்பூரர் ஒருவர் போட்டியிடவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் லோ கியன் இயூ இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தைச் சந்திப்பார்.
பேட்மிண்டன் உலக சம்மேளனம் நடத்தும் உலகப்போட்டியின் அரை இறுதிச் சுற்று சனிக்கிழமை (டிசம்பர் 18) அன்று ஸ்பெயினின் வெல்வா நகரில் நடைபெற்றது.
அதில் லோ, பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் மூன்றாம் நிலையில் உள்ள டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்சனை 23-21, 21-14 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றி கண்டார்.
இதன்வழி, பேட்மிண்டன் உலகப் போட்டியில் சிங்கப்பூருக்கு முதன்முறையாக குறைந்தது வெள்ளிப் பதக்கம் கிடைப்பதை லோ உறுதி செய்திருக்கிறார்.
லோ கியன் இயூ பேட்மிண்டன் உலகப் போட்டியில் கலந்துகொள்வது இதுவே இரண்டாவது முறையாகும்.
இந்நிலையில் சனிக்கிழமை அன்று நடந்த மற்றோர் அரை இறுதி ஆட்டத்தில், சக நாட்டவரான லக்ஷயா சென்னை 17-21, 21-14, 21-17 எனும் செட்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோற்கடித்தார்.
உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், பேட்மிண்டன் உலகப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய ஆட்டக்காரர் ஆவார்.